கட்டுரை: 

உண்மை இதழ்

வி.சி.வில்வம்

மனித வாழ்வில் குழந்தையின்மை என்பது பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட தம்பதியினரைக் குற்றவாளியாகக் கருதும் கொடுமையும் நிகழ்கிறது. திருமணமான ஒரே ஆண்டிற்குள் குழந்தை பிறக்காவிட்டால், ‘ஏன்? என்னாச்சு?’ என்கிற கேள்விகள் அல்லது தொந்தரவு அவர்களைச் சித்ரவதை செய்கின்றது.
குழந்தையின்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இன்றைக்கு அறிவியல் வென்றெடுத்துள்ளது. அதையும் மீறி சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
இன்னமும் திருமணம் ஆகவில்லையா? என்பதும், ஆன பிறகு குழந்தை இல்லையா? என்கிற கேள்விகளும் இங்கே அநாகரிகமாக உலாவி வருகிறது. இவையெல்லாம் நல்ல சமூகத்தை உருவாக்கப் பயன்படாது. அதேநேரம் குழந்தையின்மை என்பதை முற்போக்குச் சிந்தனை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்!

பெற்றால்தான் பிள்ளையா?
திருமணமே கட்டாயம் அல்ல; திருமணம் செய்த பின் குழந்தை பெற வேண்டும் என்பது
கட்டாயம் அல்ல என்று கூறியவர் பெரியார். குழந்தை வளர்ப்பில் ஆசையிருந்தால் குழந்தை
யைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்றார். சொன்னது மட்டுமல்ல, ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து, உயர்நிலைக்குக் கொண்டு வர ஒரு நிறுவனத்தையே திருச்சியில் நிறுவியவர் பெரியார். குழந்தை இல்லாதவர்கள் இதை ஆழ மனதில் கொள்ள வேண்டும்.

பரமேசுவரன் என்ற முன்னோடி
ஆழிப்பேரலையை (சுனாமி) நாம் இன்னமும் மறந்திருக்க முடியாது. அந்நிகழ்வில் நாகப்பட்டினம் பரமேசுவரன் என்பவரது 3 குழந்தைகளும் அடித்துச் செல்லப்பட்டன. குழந்
தைகள் இல்லாத வாழ்வை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதேநேரம் அவர் சோர்ந்துவிடவில்லை. அதே ஆழிப்பேரலையால் பெற்றோர்களை இழந்த 18 குழந்தைகளைத் (ஒன்றல்ல, இரண்டல்ல – 18 குழந்தைகள்) தத்
தெடுத்து “குழந்தைகளின் உலகத்தையே” உரு
வாக்கி விட்டார். கவலைகள் என்பது இயல்பு.
அவற்றை முன்னெடுத்துச் செல்வதே பகுத்தறிவு!

குழந்தைகளைத்
தத்தெடுப்பது எப்படி?
தங்களுக்குக் குழந்தைகள் இருக்
கும் பொழுதே, மற்றுமொரு குழந்தை
யைத் தத்தெடுத்து வளர்க்கும் உயரிய மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். தத்தெடுப்பு என்பது ஒருபுறம் மகிழ்ச்சியானது என்றாலும் அவற்றுள் மனிதநேயம், சமூகப்பற்று, ஜாதி மறுப்பு, தனித்துவம், உயரிய குணாதிசயம் எனப் பல சிறப்புகள் அடங்கியுள்ளன.
இதுபோன்ற செயல்களின் தொடர்புக்கு “குழந்தைகள் தத்
தெடுத்தல் சார்ந்த ஒருங்கிணைப்பு மய்யம்” என்கிற அரசு சார்பு நிறுவனம் இங்கே இயங்குகின்றது. தமிழ் நாட்டில் 19, பாண்டிச்சேரியில் 2 என மொத்தம் 21 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகுந்த வரவேற்போடு நம்மை அணுகும் இந்நிறுவன சமூக ஊழியர்கள், நமக்கான அனைத்துச் செயல்களையும் சட்டப்படி செய்து தருகின்றனர்.
நாம் முதலில் அவர்களைத் தொடர்பு கொள்ளும் போது, நம்மைப் பற்றி அவர்கள் விசாரிப்பர். நமக்கான தேவை என்ன? நம் பொருளியல் நிலை என்ன? எந்தக் குழந்தை வேண்டும்? எத்தனை மாதக் குழந்தை வேண்டும்? தம்பதியினர் இருவருக்கும் உடன்பாடுதானா? உங்கள் குடும்பத்தவர்களின் நிலை என்ன? என ஒன்றுவிடாமல் விசாரணை செய்து, பிறகுதான் நமக்கு விண்ணப்பம் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் இரத்த உறவுள்ள இருவரின் ஆதரவுக் கடிதம், நண்பர்கள் வட்டாரத்தில் இருவரின் கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் திருமணப் பதிவுச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வயதுச் சான்று, வருமானச் சான்றும் இணைத்தல் வேண்டும். இவைகளைப் பெற்றுக் கொள்ளும் அந்தக் குழந்தைகள் மய்யம், ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து நேரிடையாக நம்மிடம் வருவர். குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் அவர்களின் ஆதரவு நிலை என்ன? கொடுக்கப்பட்ட ஆவணங்களின் படி சரியாக இருக்கிறதா? அவர்களின் வருமானத்தில் குழந்தையை வளர்க்க முடியுமா? என ஆய்வு செய்வர். அதன்பிறகே விண்ணப்பத்தை அங்கீகரிப்பர். அதன் நகலை 21 கிளை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைப்பர். வாய்ப்பான நேரத்தில் நமக்கான குழந்தையை அவர்கள் பெற்றுத் தருவர்.

சட்டச் சிக்கல் ஏதேனும் நிகழுமா?
வாய்ப்பு இல்லை! ஏனெனில் இது அரசு சார்பு நிறுவனம். மேலும் நீதிமன்றத்தின் மூலமாக இந்நிகழ்வுகள் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இங்கே வரக்கூடிய குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன? எப்படிக் கிடைக்கின்றன? என்ற கேள்விகளோடு அக்குழந்தைகள் ஒருங்கிணைப்பு மய்யத்தின் ஊழியர் சரோஜினி அவர்களைத் தொடர்பு கொண்ட போது, “இந்த மய்யத்திற்கு வரக்கூடிய குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரிக்கிறோம்.
ஒன்று, ஒப்புவிக்கப்பட்ட குழந்தைகள். இந்த அடிப்படையில் வருபவர்கள் ஏற்கெனவே பெண் குழந்தைகள் இருந்து, அடுத்ததும் பெண் குழந்தையாக இருந்தால் பெற்றோர்களே ஒப்படைத்துச் செல்வர். அதேபோன்று தவறான உறவினால் உருவான குழந்தைகள், விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகள் இவ்வகைப்படுவர். இரண்டாம் வகையில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட தொட்டில் குழந்தைகள் அடங்குவர். இதில் முதல் வகைக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அனைத்துச் சான்றுகளும் பெறப்பட்டு, இரண்டு மாதங்கள் கழித்து அரசு காப்பகக் குழந்தையாக சட்டப்படி மாறிவிடும்.
இரண்டாம் வகைக் குழந்தைகளின் உறவுகளைப் பெறுவதற்கு அனைத்து முயற்சி
களும் செய்யப்படும். கண்டுபிடிக்க முடியாத நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் அக்குழந்தைகளும் அரசுக் குழந்தைகளாக மாறிவிடும். அதன்பிறகு பெற்றோர்கள் வந்தாலும் குழந்தைகளுக்கும்,அவர்களுக்குமான உறவு சட்டப்படி நின்றுவிடும். அக்குழந்தை எங்கு வளர்கிறது என்கிற செய்திகள் கூட யாருக்கும் தெரியாது. எனவே முறைப்படியான, சட்ட பூர்வமான வகையில் இந்த அரசு அமைப்பு செயல்பட்டு வருகிறது”, என விளக்கம் அளித்தார்.

தத்தெடுக்கும் நடைமுறைகள்:
நம்முடைய விண்ணப்பத்திற்கு ஏற்ற குழந்தைகள் வரும் பொழுது நமக்குத் தகவல் தருவர். ஒன்றும், அதற்கு மேலும் குழந்தைகள் இருந்தால் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழந்தையைப் பெற்றுக் கொண்டதற்குப் பிறகு பெற்றோர்களுக்கும், ஒருங்கிணைப்பு மய்யத்திற்குமான ஆவணங்கள் தயார் செய்யப்படும். குழந்தைக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பது உள்பட அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்படும். பின் குழந்தையின் பராமரிப்பு தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாம் தகவல் அனுப்ப வேண்டும். அக்குழந்தையின் 18 வயது வரை குழந்தைகள் ஒருங்கிணைப்பு மய்யம் கண்காணிக்கும்.
எனவே, குழந்தைகள் தத்தெடுப்பு என்பது எளிதானது. நம் மனமும் அதற்கேற்ப இலகுவாக வேண்டும். தயக்கங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு, கவலைகளைக் காணாத தூரம் திருப்பி அனுப்பிவிட்டு, சமூகப் புரட்சியாம் இப்பணியை நாம் செய்தாக வேண்டும். சுயநலமும், பொது நலமும் அடங்கியது இந்நிகழ்வு. அதுநேரம் அம்மழலைச் செல்வம் நம் மடியில் தவழும்! மனிதநேயம் தழைக்கும்!