வியாழன், 21 நவம்பர், 2019

பழைய தீர்ப்புக்குத் தடையில்லை சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம்!

*7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

* உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ.14 சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந் துரைத்துள்ளதோடு, பெண்களை அனுமதிக்க லாம் என்கிற உத்தரவே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றி யது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண் கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை நீக்கியது. அத் தோடு, பக்தியை பாலின பாகு பாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திர சூட், கன்வில்கர் மற்றும் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா ஆகியோர் இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் மாறாக தீர்ப்புகளை அளித்தனர். உச்சநீதி மன்ற நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பின்மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது.

இதனைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் மத்தியில் இவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கவே, தேவசம்போர்டு தரப்பில் தலைமை நம்பூதி கண்டரரு ராஜீவரரு சார் பில் மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவோடு மேலும் 64 மனுக்கள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விசா ரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத் திருந்தது.

இந்நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது இன்று (14.11.2019) தீர்ப்பு  வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பெண் களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் பெண்கள் செல்ல தடை விதிப்பதாகவும் தீர்ப்புகளை வழங்கினர். தீர்ப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், இந்து மல் கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மறுபரிசீலனை மனுக்கள் நிலுவையில் இருப்பதால், பழைய நிலைப்படி பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 14 11 19