ஞாயிறு, 13 டிசம்பர், 2015

முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?


வாசக நேயர்களுக்காகவும், பொது மக்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது: பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப் பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்: ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, காப் பீட்டுத்  தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் காப் பீட்டுத் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாள் களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத் திரத்தில் தட்டச்சு செய்துகொள்ள வேண்டும். இன் னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவ ரங்கள் கேள்வி- பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை நிரப்பி நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி)
யாரை அணுகுவது: பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்:  உயர்நிலைப் பொதுத் தேர்வு (10 ஆம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத் தேர்வு (+2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:  விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாள்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் வாங்கிய பிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை நிரப்பி  வட்டாட்சியரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத் தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பவேண் டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற் பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.
3.குடும்ப அட்டை!
யாரை அணுகுவது: கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.
எவ்வளவு கட்டணம்: புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தவேண்டும்.
கால வரையறை:  விண்ணப்பம் அளித்த 45 நாள்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் நிரப்பித் தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4. ஓட்டுநர் உரிமம்!
யாரை அணுகுவது: மாவட்டப் போக்குவரத்துத் துறை அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: பழைய உரிமம் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்: கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு விண்ணப்ப  மனு கொடுக்க வேண்டும்.
5. பான் கார்டு
யாரை அணுகுவது: பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: பாஸ்போர்ட்  அளவு புகைப்படம் இரண்டு, அடை யாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்: அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாள்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்சன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்
யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்: தனியாகக் கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தவேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாள்களிலிருந்து 90 நாள்
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத் திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து, சான்றிதழ் வாங்கவேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
.
7. கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது: பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம் பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்: ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.
இதுதவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாள்களில் கிடைக்கக் கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிட மிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்லவேண்டும்.
8. டெபிட் கார்டு
யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்: ரூ.100
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாள்கள் அல்லது அதிகபட்சம் 15 நாள்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்கு தகவல் தெரிவித்து, அதன்மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்கவேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா யாரை அணுகுவது: வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்: ரூ.20
கால வரையறை: ஒரு சில நாள்களில் கிடைக்கக் கூடும்.
நடைமுறை: முதலில் வட்டாட்சியரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
9. பாஸ்போர்ட்
யாரை அணுகுவது: மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்: ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாள்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப் படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையொப்பம் பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண் டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10. கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மய்யத்துக்கு தகவல் அளித்து பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது: நிறுவனத்தின் வாடிக்கை யாளர் சேவை மய்யம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்: ரூ.100 (நிறுவனத்துக் கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாள்கள்.
நடைமுறை: தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு அட்டை அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாள்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
-விடுதலை,12.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக