சனி, 20 ஜூலை, 2024

விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


 

 புதுடில்லி, ஜூலை 12– விவா கரத்தான முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் சமது. இவர், தன் மனைவியை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அப்பெண், ஜீவனாம்சம் கோரி,குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, அவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்குமாறு முகமது அப்துல் சமதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தெலுங் கானா உயர்நீதிமன்றத்தில் அப்துல் சமது, மேல்முறையீடு செய்தார். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி விவாகரத்து செய்ததாகவும், விவாகரத்து சான்றிதழ் இருப்பதாகவும், ஆனால் அதை குடும்பநல நீதிமன்றம் பரிசீ லிக்க தவறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், குடும்பநல நீதிமன்றம் உத்தரவில் உயர்நீதி மன்றம் தலையிட மறுத்து விட்டது. இருப்பினும், ஜீவனாம்ச தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தது. அந்த உத்தரவை எதிர்த்து முகமது அப்துல் சமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிமன்றத்துக்கு உதவும் ஆலோசகராக வழக்குரைஞர் கவுரவ் அகர் வாலை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அப்துல் சமது சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வாசிம் காத்ரி, “முஸ்லிம் பெண்களுக்கு 1986ஆம் ஆண்டின் விவாகரத்துக்கான உரிமைகள் பாதுகாப்பு சட்டம்தான் பொருந்தும். ஜீவனாம்சம் தொடர்பான இந்திய குற்றவியல் சட்டத்தின் 125ஆவது பிரிவு பொருந்தாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு 10.7.2024 அன்று இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. முகமது அப்துல் சமதுவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது:- ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பான குற்றவியல் நடை முறை சட்டத்தின் 125ஆவது பிரிவு, மத வேறுபாடுகளை கடந்து, நடுநிலையான, மதச் சார்பற்ற சட்டப்பிரிவு, அது, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.

எனவே, குற்றவியல் நடை முறை சட்டத்தின் 125ஆவது பிரிவுப்படி, விவாகரத்தான முஸ்லிம் பெண்க ளும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம். அந்த பிரிவை விட 1986ஆம் ஆண்டின் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மேலானது அல்ல. மேலும், ஜீவனாம்சம் என்பது தர்ம காரியம் அல்ல. அது திருமணமான அனைத்து பெண்களின் உரிமை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

திங்கள், 1 ஜூலை, 2024

வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்-3

 



 ஜுன் 16-30 2024

பகுதி 2
(ஆ) சமத்துவம், கண்ணியம், சகிப்புணர்வு

1. இனவாதம், இனப்பாகுபாடு, இனவெறுப்பு முதலான சகிப்பின்மையும் சகிப்பின்மையின் பிற உருவங்களும்

19. சர்வதேச சமுதாயத்தைப் பொறுத்தவரையும் மனித உரிமைத்துறையில் உலகு தழுவிய அளவிலான நிகழ்ச்சித் திட்டத்துக்கும் இனவாதமும் இனப் பாகுபாடும் ஒழிக்கப்பட வேண்டியது முதல் நோக்கமாக அமைய வேண்டுமென இம்மாநாடு கருதுகிறது. அதிலும் குறிப்பாக சமூக வாழ்வின் அம்சமாகவே நிலைநிறுத்தப்பட்டுவிட்ட நிறவெறி போன்ற அம்சங்களும் தத்துவ அடிப்படையிலான மேலாண்மை இனவழி உயர்வு, தனிப்படுத்தப்படல் (exclusivity) இனவாதத்தின் தற்கால உருவங்கள் வெளிப்பாடுகள் ஆகியவை அழிக்கப்படவேண்டும்.

20. எல்லாவித உருவங்களிலும் வெளிப்பாடுகளிலும் தோன்றும் இனவாதம் இன வெறுப்பு, இவை சம்பந்தப்பட்ட சகியாமை ஆகியவற்றைத் தடுத்துப் போராட உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், இத்துறையில் வலுவான கொள்கைகளை உருவாக்குமாறும் எல்லா அரசாங்கங்களையும் இம்மாநாடு வற்புறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்காக தண்டனைக்கான வகையுரைகள் உட்பட தக்க சட்டங்களை இயற்றுமாறும், இத்தகைய எதிர்ப்புக்காக தேசிய நிறுவனங்களை ஏற்படுத்துமாறும் வலியுறுத்துகிறது.

22. சிந்தனை, சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், மத சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டென்பதை ஒப்புக்கொண்டும் தத்தம் சர்வதேசக் கடப்பாடுகள் நிமித்தமும், தத்தம் சட்ட அமைப்பு களுக்குரிய மதிப்பு கொடுத்து, மகளிர்க்கெதிரான பாகுபாட்டுப் பழக்கங்கள், வழிபாட்டிடங்களைத் தூய்மை கெடுத்தல் முதலியன உள்ளிட்ட மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான சகியாமை, அது குறித்த வன்முறை ஆகியவற்றுக்கெதிரான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கங்களை இம்மாநாடு வேண்டுகிறது…

23. (குறிப்பிட்ட பிரிவினரை ஒட்டுமொத்தமாகத் தீர்த்துக்கட்டுவதன் மூலம்) ‘இனத்தைத் தூய்மைப்படுத்துகிற’ வகையான குற்றங்களைச் செய்கிறவர்களும், அத்தகு பாதகச் செயல்களை அனுமதிப்போரும் அந்தந்த நபர்களே அதற்குப் பொறுப்பாக்கப்பட்டு அத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு விளக்க மளிக்க வேண்டியவராக்கப்படவேண்டும். பன்னாட்டுச் சமுதாயம் அத்தகைய மீறல்களுக்கு சட்டபூர்வமான பொறுப்பேற்க வேண்டியவர்களை நீதியின் பிடிக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.

24. இனத்தூய்மைப்படுத்தலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர, அதை எதிர்த்துத் தனியாகவும், ஒருவரோடொருவர் சேர்ந்தும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநாடு அரசுகளனைத்தையும் கேட்டுக் கொள்கிறது. அருவருப்பூட்டும் இந்த ‘இனத் தூய்மைப்படுத்தல்’ பழக்கத்துக்கு இரையான மக்கள் பலனளிக்கக் கூடிய, தகுந்த நிவாரணத்துக்கு உரியோர் ஆவார்.

2. தேசிய இனவழியான, மத-மொழி சிறுபான்மையினர்

26. தேசிய-இனவழியான-மத-மொழி சிறுபான்மையினர் உரிமை பற்றிய பிரகடனத்துக்கு இணங்க அத்தகைய சிறுபான்மையரின் உரிமைகளைப் பேணவேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று உலக (நாடுகள்) சமுதாயத்தையும் அரசுகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

27. தேவையான இடங்களிலெல்லாம் தத்தம் நாட்டின் அரசியல் – பொருளாதார – சமூக கலாச்சார வாழ்விலும் பொருளாதார முன்னேற்றத்திலும் எல்லாவகையிலும் அத்தகைய சிறுபான்மையினர் முழுப்பங்கேற்க வகை செய்யும் நடவடிக்கைகளும் இதில் அடங்க வேண்டும்.

31. ஆதிக்குடிகள், சமூகவாழ்வின் எல்லா அம்சங்களிலும், குறிப்பாக தாம் சம்பந்தப்பட்ட அம்சங்களில், முழுமையாகவும் சுதந்திரமாகவும் பங்கெடுக்க அரசுகள் உறுதி செய்யவேண்டுமென்று மாநாடு வேண்டுகிறது.

33. எல்லா புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள், அவர்தம் குடும்பத்தாரின் உரிமைகள் ஆகியவற்றின் பாதுகாப்பினை அரசுகள் உறுதி செய்யவேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

34. புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் நாட்டின் பிற மக்களுக்கும் அதிகப்படி இணக்கத்தையும் சகிப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதென்று இந்த மாநாடு கருதுகிறது.

4. குழந்தைகளின் உரிமைகள்

47. உலகளாவிய உச்ச நடவடிக்கைத் திட்டத்தின் இலட்சியங்களை அடைவதற்கான நடவடிக்கைகளை வசதிவாய்ப்புகளுக்கு ஏற்ப, உயர்ந்தபட்ச அளவுக்கு, பன்னாட்டுக் கூட்டுறவுடன் மேற்கொள்ளுமாறு எல்லா நாடுகளையும் மாநாடு வலியுறுத்துகிறது. தமது தேசிய நடவடிக்கைத் திட்டத்தில், ‘குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை’யையும் உட்பொதியுமாறு ஒருங்கிணைத்துக் கொள்ளுமாறு இந்த மாநாடு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வகை தேசிய நடவடிக்கைத் திட்டங்கள் மூலமும், சர்வதேச முயற்சிகள் மூலமும், தாய்சேய் உயிரிழப்பு விகிதங்களையும் சத்துணவுக் குறைவு, கல்லாமை ஆகியவற்றின் விகிதங்களையும் குறைக்கவும் பாதுகாப்பான குடிநீர், அடிப்படைக்கல்வி ஆகியவை கிடைக்கச் செய்யவும் குறிப்பிடத்தக்க முன் முக்கியத்துவம் தரப்படவேண்டும். தேவை நேரும் இடங்களிலெல்லாம் தேசிய நடவடிக்கைத் திட்டங்கள் இயற்கைப் பேராபத்துகளிலிருந்தும், ஆயுதப் போராட்டங்களிலிருந்தும் ஏற்படும் பேரழிவூட்டும் நெருக்கடிகளுக்கெதிராகப் போரிடவும் இவற்றுக்கிணையாக எல்லை மீறிய வறுமையில் வாடும் குழந்தைகளின் துயரங்களுக் கெதிராகப் போரிடவும் வகை செய்யவேண்டும்.

48. சர்வதேசக் கூட்டுறவுடன் கடுமையான சிரம சூழ்நிலைகளுக்கு ஆளாகியிருக்கிற குழந்தைகளின் மோசமான பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டுமென எல்லா அரசுகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கெதிரான சுரண்டல், குழந்தைகளைத் தவறாக நடத்துதல், ஆகியவற்றுக்கெதிராக வலுவாகப் போராட வேண்டும். அவற்றின் அடிப்படைக் காரணங்களை ஆராயவேண்டும். பெண் சிசுக்கொலை, குழந்தைத் தொழிலாளர் கொடுமை, குழந்தைகளை விற்றல், உடலுறுப்புகளை விற்றல், குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தல், ஆபாச நூல்களுக்குப் பயன்படுத்தல், போன்ற பிற பாலியல் கொடுமைகளுக்கெதிராக பயனுள்ள நடவடிக்கைகள் தேவை.

49. பெண் குழந்தைகளின் மனித உரிமைகளைப் பேணுவதையும் வெற்றிகரமாகப் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்காக அய்.நா மற்றும் அதன் சிறப்பமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த மாநாடு ஆதரிக்கிறது. பெண் குழந்தைகளுக்கெதிரான பாகுபாடுகளுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு இன்னல் விளைவிப்பதாகவும் உள்ள சட்டங்களையும் விதிமுறைகளையும் நீக்குமாறும் பழக்கவழக்கங் களை அகற்றுமாறும் இம்மாநாடு எல்லா அரசுகளையும் வற்புறுத்துகிறது.

50. ஆயுதப் போர்களின்போது குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி ஆராய அய்.நா. பொதுச் செயலர் ஓர் ஆய்வினைத் துவக்க வேண்டும் என்ற கருத்தினை இம்மாநாடு வலுவாக ஆதரிக்கிறது. போர்ப் பகுதிகளில் குழந்தைகளுக்கு உதவி கிட்டுமாறு செய்யவும், பாதுகாப்பளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; மனித நேய நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப் படவேண்டும். போர்க் கருவிகளை, அதுவும் ஆட்கொல்லி கண்ணிவெடிகளை, சகட்டு மேனிக்குப் பயன்படுத்துவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் அவற்றில் இருக்கவேண்டும். போரினால் மனமுறிவு ஏற்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கும், கவனிப்புக்குமான தேவைகள் விரைந்து கவனிக்கப்பட வேண்டும். படைகளுக்கு ஆள்சேர்ப்பதில் குறைந்த பட்ச வயதினை உயர்த்துவது பற்றி ஆராயுமாறு குழந்தைகள் உரிமைகள் பற்றிய குழுவினை இந்த மாநாடு வேண்டுகிறது.

5. சித்திரவதையிலிருந்து விடுதலை

57. எனவே, சித்திரவதை செய்யும் பழக்கத்துக்கு உடனடியாக முடிவுகட்டும்படியும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தையும் இதர ஆவணங்களையும் செயல்படுத்துவதன் மூலமும், தேவைப்படுமிடங்களில், இப்போதுள்ள ஏற்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலமும் இந்தத் தீமையைக் காலகாலத்துக்குமாக ஒழித்துக்கட்டுமாறும் எல்லா அரசுகளையும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

62. அய்.நா. பொதுச்சபை ‘காணாமற் போக்கடிக்கப்பட்ட அனைவரது பாதுகாப்புக்குமான’ பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை வரவேற்கும் இம்மாநாடு ‘கட்டாயமாய்க் காணாமற் போகவைக்கும்’ செயல்களைப் புரிவோரின் நடவடிக்கைகளை தடுக்கவும், நிறுத்தவும், தண்டிக்கவும் எல்லா அரசுகளும் பலனுள்ள நிருவாக நடவடிக்கைகளும் சட்டமியற்றல்களும், நீதித்துறை நடவடிக்கைகளும் எடுக்கவேண்டுமெனவும் கோருகிறது. எந்தச் சூழ்நிலையிலும், அவர்களது எல்லைக்குட் பட்ட மண்ணில் அத்தகைய காணாமல்போக வைத்தல் நிகழ்ந்திருக்கலாமென்று நம்புவதற்குக் காரணமிருந்தால், அதுபற்றி விசாரணை நடத்துவதும், அத்தகைய குற்றச்சாட்டு ஏதும் நிரூபணமானால் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதும் எல்லா அரசுகளுக்கும் உள்ள கடமை என்று இம்மாநாடு மீண்டும் உறுதியிட்டுரைக்கிறது.

6. ஊனமுற்றோர் (மாற்றுத் திறனாளர்)உரிமைகள்

63. எல்லா மனித உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் உலகளாவியவை. ஆகவே எந்த விலக்குமின்றி ஊனமுற்றோர்க்கும் அவை உரியவை என்று இம்மாநாடு மீண்டும் உறுதியிட்டுரைக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், நல்வாழ்வுக்கும், கல்விக்கும் வேலைக்கும், தற்சார்ந்த வாழ்வுக்கும், சமூகத்தின் சகல துறைகளிலும் துடிப்பாகப் பங்காற்றவும் அனைவருக்கும் சமவுரிமை உண்டு. எனவே ஊனமுற்ற ஒருவருக்கெதிரான நேரடியான பாகுபாடும் சரி, எதிர்மறையான ஊறுவிளைக்கும் வித்தியாசப்படுத்தலும் சரி, அவரது உரிமையை மீறுவதாகும். இந்தப் பத்தியில் கூறும் உரிமைகளும் இன்னபிற உரிமைகளும் கிட்டுவதை உறுதிசெய்யும் வகையில், தேவைப்படுமிடங்களிலெல்லாம் சட்டங்களில் தக்க ஏற்பாடுகள் செய்தோ அனுசரணைகளை ஏற்படுத்தியோ வழிசெய்யுமாறு அரசாங்கங்களை இந்த மாநாடு வேண்டிக்கொள்கின்றது.

64. ஊனமுற்றோருக்கு எங்கும் இடமுண்டு. பொருள் ரீதியாகவோ, நிதிப்பற்றாக்குறையோ, சமூக அல்லது மனவியல் பூர்வமானதோ-சமூக நிர்ணயிப்புக்குட்பட்ட எவ்வகைத் தடைகளிருப்பினும், அவர்கள் சமூகத்தில் முழுமையாகப் பங்கெடுப்பதைக் குறைக்கவோ குலைக்கவோ செய்யும் தடைகளைத் தகர்த்து அவர்களுக்கும் சம வாய்ப்புத்தரப்பட வேண்டும்.

7. மனித உரிமைக் கல்வி

78. சமுதாயங்களிடையே நிலையானதும் நல்லிணக்கம் கொண்டதுமான உறவுகளை எய்தவும்-பேணவும், பரஸ்பர புரிந்துகொள்ளலையும் சகிப்புணர்வையும், அமைதியையும் ஏற்படுத்தவும் மனித உரிமைக் கல்வியும் மனித உரிமை பற்றிய பயிற்சியும், அதுசார்ந்த பொதுத் தகவல் அமைப்பும் அவசியத் தேவைகளென்று இம்மாநாடு கருதுகிறது.

79. அரசுகள் எழுத்தறிவின்மையை ஒழிக்கப் பாடுபடவேண்டும். மனித ஆளுமையின் முழுமேம்பாட்டை நோக்கியும், மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவை மீதான மரியாதையை வலுப்படுமாறும் கல்வியை வழிப்படுத்த வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் முதலானவற்றிலும் முறை சாராக் கல்வியிலும் மனித உரிமைகள், மனிதநேயச் சட்டங்கள், மக்களாட்சி, சட்டத்தின் நேரிய ஆட்சி ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு எல்லாக் கல்வி நிறுவனங்களையும் அரசுகளையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

80. மனித உரிமைகள் மீதான கடப்பாடு உலகம் முழுதிற்கும் இருக்கிறது. அதனை வலுப்படுத்தும் வகையில் விழிப்பையும் பொதுஅறிவையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக, சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களில் கண்டுள்ளபடியாக, மக்களாட்சி சமாதானம் – மேம்பாடும் சமூக நீதியும் போன்றவை மனித உரிமைக் கல்வியில் இடம்பெறவேண்டும்.

81. அய்.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகம் (யுனெஸ்கோ) ஏற்பாடு செய்த மனித உரிமையும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான பன்னாட்டு மாநாடு 1933 மார்ச் திங்கள் ஏற்றுக் கொண்ட மனித உரிமைக்கும் மக்களாட்சிக்குமான கல்வி குறித்த உலக நடவடிக்கைத் திட்டத்தையும் பிற மனித உரிமை ஆவணங்களையும் கருத்திற் கொண்டு இம்மாநாடு அரசுகளை மகளிரின் மனித உரிமைத் தேவைகளையும் குறிப்பாக மனதில் கொண்டு உயர்ந்த பட்சம் பரவலான மனித உரிமைக் கல்விக்கும், பொதுத் தகவல் பரிமாற்றத்துக்கும் உறுதியளிக்கக்கூடிய குறிப்பான திட்டங்களையும் நடைமுறைக் கொள்கைகளையும் தீட்டுமாறு கேட்டுக் கொள்கிறது.

82. பன்னாட்டு அமைப்புகள், தேசிய நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றின் உதவியுடன், அரசுகள் மனித உரிமைகள் பற்றியும் பரஸ்பர சகிப்புத் தன்மையையும் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். அய்.நா. நடத்திய மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பொதுத் தகவல் பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது. அரசுகள் மனித உரிமைக் கல்வியை ஆரம்பிக்க வேண்டும், ஆதரவளிக்க வேண்டும். இத்துறையில் பொதுத் தகவல் பரிமாற்றத்துக்கும் பயனுள்ள வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டும். மனித உரிமை தொடர்பான கல்விக்கும் பயிற்சிக்கும் அரசுகள் எந்த உதவி கேட்பினும் அய்.நா.வின் அறிவுரைப் பணிக் குழுக்களும், தொழில் நுட்ப உதவித் திட்டங்களும் உடனடியாக உதவ சக்தியுள்ளவையாக இருக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் மனித நேயச் சட்டங்களிலும் குறிப்பிட்டுள்ள தர நிர்ணயிப்புகள், இராணுவம், சட்டத்தை நிறைவேற்றும் அதிகார அமைப்புகள், காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற முக்கியமான அமைப்புகளில் அவற்றைச் செயல்படுத்தும் தனிமுறைகள் பற்றிய கல்வி, பயிற்சித் தேவைகளிலும் அய்.நா.வின் மேற்சொன்ன அமைப்புகளின் உடனடி உதவி கிட்டவேண்டும். இத்தகைய கல்வி நடவடிக்கைகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், மய்யப்படுத்தவுமான நோக்கத்தில் ‘அய்.நா. மனித உரிமைக் கல்வியின் பத்தாண்டு’ என்ற ஒன்றைப் பிரகடனப்படுத்துவது பற்றியும் சிந்திக்க வேண்டும். (முற்றும்)

சனி, 29 ஜூன், 2024

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை-1

 



 பிப்ரவரி 16-29, 2024 

கீழே தரப்பட்டிருப்பது பாரிசில் 1995இல் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 28ஆம் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைத் திட்ட வரையறை’ ஆகும்.

முன்னுரை

1. சர்வதேச கல்வி மாநாட்டின் 44ஆம் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த வரையறையின் நோக்கமாகும். பல்வேறு சமூகங்களின் நிலைமைகளுக்கேற்ப தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைமுறைக்கான உத்திகளாகவும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் மாற்றிக்கொள்ளப்படக்கூடிய வழிகாட்டு நெறிகளை இது முன் வைக்கிறது.

2. இது விரைவான மாறுதல்களும் மாற்றங்களும் நிகழும் காலம். சகிப்பின்மை வெளிப்பாடுகள், இனப் பண்பாட்டின் வெறுப்பின் தோற்றங்கள், தன் அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் பயங்கரவாதத்தின் எழுச்சி, பாகுபாடுகள், போர், ‘அந்நியர்’க்கு எதிரான வன்முறை, செல்வர்க்கும் இல்லார்க்கும் இடையிலான பிளவுகளின் வளர்ச்சி ஆகியவை நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் தோன்றும் காலம். இக்காலத்துக்கேற்ப, அடிப்படை சுதந்திரம், அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றை உறுதி செய்தல் நிலைத்து நிற்கக் கூடியதும் சமத்துவ அடிப்படையிலானதுமான சமூக- பொருளாதார மேம்பாட்டை வளர்த்தல் என்ற இரண்டையும் குறிவைத்து செயல்முறை உத்திகள் உருவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இவை யாவுமே ஒரு சமாதானக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான பங்களிப்பைத் தருவன. அதற்கு மரபுசார்ந்த கல்விப் பணிமுறை
களில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.

3. உலகில் இன்று காணும் சவால்களை எதிர்காணுவதற்குரிய ஒன்றுபட்ட பயனுள்ள வழியில் செயல்பட உதவக்கூடிய ஆவணங்களைத் தனக்காக ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று உலக நாடுகள் அண்மையில் உறுதிபூண்டன. இந்தத் திசையில் மனித உரிமைகள் பற்றிய உலக மாநாட்டில் (வியன்னா, ஜூன் 1993) ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்’ மனித உரிமைகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான சர்வதேசப் பேரவைக் கூட்டத்தில் (மாண்ட்ரியல் நகர் மார்ச் 1993) ஏற்கப்பட்ட ’மனித உரிமகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான உலக நடவடிக்கைத் திட்டம்’, இணைக்கப்பட்ட பள்ளிகள் திட்ட உத்தி மற்றும் நடவடிக்கைத் திட்டம் (1994-2000) ஆகியன உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள், மேம்பாடு இவற்றைப் பேணுவதில் எதிர்கொள்ள நேரும் சவால்களைச் சந்திக்க உதவும் முயற்சிகளாகும்.

4. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறையானது ‘நாடுகளுக்கிடையிலான ஒத்திசைவு, ஒப்புறவு, உலக அமைதி இவற்றுக்கான கல்வி பற்றிய பரிந்துரை’, ‘மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் தொடர்பான கல்வி’ ஆகியவற்றால் உந்தப்பட்டு தனது உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசாங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் முன்பு ‘உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வி தொடர்பான சிக்கல்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் பற்றியும் ஒருங்கிணைவான, நிகழ்நாளுக்குரிய ஒரு பார்வையை முன் வைக்கிறது. பொது மாநாடு தன் 27ஆம் அமர்வில் வேண்டியபடி இதனைச் செய்கையில் நடப்பில் உள்ள நடவடிக்கைத் திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் நடைமுறை முக்கியத்துவம், பயன்தரு வலிமை ஆகியவற்றை வலுப்படுத்துவதே நோக்கமாயிருக்கிறது. எல்லா நாட்டு மக்களுக்கும் கல்வியறிக்கை, புதிய வழிகள் காண்பதற்காக கடந்தகால அனுபவம் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் விழைவு. அதற்குத் தக்க வண்ணம் இந்தத் திட்டவரையறை செயல்பாடுகளுக்கான கோட்பாடுகளையும் இலக்குகளையும் அடையாளம் காட்டுகிறது; ஒவ்வொரு அரசுக்கும் ஏற்ப அது வகுத்துக் கொள்ள வேண்டிய கொள்கைகளை உருவாக்குவோர் கவனத்துக்கு கருத்துரைகளை முன்வைக்கிறது. பிரகடனத்தில் கண்டுள்ள கடப்பாடுகளுக்கேற்ப அத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட நாடுகள் தம்முள் ஒப்புறவுடன் செயல்பட வகை செய்கிறது. ஆய்வுக்குரிய தலைப்புகளை நிர்ணயிக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஒரு இசைவான முழுமைக்குள் இணைத்துக் கொண்டுவர முயற்சிக்கிறது. அனைத்து மட்டங்களிலும் கல்வியை மறு ஒழுங்கு செய்ய முயல்கிறது. முறைகளை மறுசிந்தனைக்குட்படுத்துகிறது; கற்பிக்கும் கருவிகளை மறுபரிசீலனை செய்கிறது. ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆசிரியப் பயிற்சியை மேம்படுத்துகிறது. ஆக, கல்விமுறை மேலும் வெளிப்படையானதாக அனைவரும் பங்கெடுப்பதன் மூலம் உருப்பெற உதவுகிறது.

5. மனித உரிமகள் யாவும் உலகளாவியன, பிரிக்க முடியாதன, ஒன்றையொன்று சார்ந்தன, ஒன்றுக்கொன்று தொடர்பானவையுமாம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்திகள் குறிப்பிட்ட வரலாற்றுபூர்வமான, சமயபூர்வமான, பண்பாட்டியல் பூர்வமான அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியின் இலக்குகள்:

6. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி, ஆகியவற்றுக்கான கல்வியின் இறுதி இலக்கு, ஒவ்வொரு மனிதரின் மனதிலும், அமைதிப் பண்பாட்டுக்கு அடித்தளமாயமைந்துள்ள உலகளாவிய மதிப்பீடுகள், நடத்தைகளையும் விதைப்பதாகும். வெவ்வேறு சமூக- பண்பாட்டுச் சூழ்நிலைகளிலும்கூட உலக முழுவதிலுமே ஒப்புக்கொள்ளப்படக்கூடிய பொதுவான மதிப்பீடுகளை இனங்காண இயலும்.

7. சுதந்திரத்தை மதிக்கவும், அதன் சவால்களைச் சந்திக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவுமான வலிமையை கல்வி தரவேண்டும். சிரமங்களையும் நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள குடிமக்களைப் பழக்குவதும், பொறுப்புகளுக்கும் சுயசார்புக்கும் அவர்களைத் தயார் செய்வதுமே இதன் பொருளாகும். குடிமக்களின் கடப்பாட்டிற்கு உரிய மதிப்பினை ஒப்புக்கொள்வது, சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றவர்களுடன் இணைந்து உழைப்பது, நியாயமும் சமாதானமும் ஜனநாயகமும் நிலவும் ஒரு சமூகத்தைப் படைக்க முயல்வது ஆகியவற்றுடன் சுய பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு இணைந்திருக்கிறது.

8. பால்வேறுபாட்டிலும், சமூகங்களுக்கிடையிலான வித்தியாசங்களிலும் மனிதருக்கு மனிதர் உள்ள வேறுபாட்டிலும், பண்பாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளிலும் காணக்கிடக்கும் மதிப்பீட்டு முறைகளை இனங்காணவும் ஏற்கவும் தேவைப்படும் சக்தியையும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளல், அறிவைப் பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கான வலிமையையும் கல்வியானது தரவேண்டும். மக்கள் தாம் நேர்காணும் நிலைமைகளைப் புரிந்துகொள்ளுவது அவர்களது சொந்த வாழ்வு சமூக வரலாறு பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்வதையும், எனவே சிக்கல்களுக்கான ஒரே தீர்வு என்றெதுவும் எந்த ஒரு தனி மனிதர் கையிலோ, தனி ஒரு குழுமத்தின் கையிலோ இல்லையென்பதையும், ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வு இருக்கமுடியும் என்பதையும் வித்தியாசங்கள் நிறைந்த உலகில் கலாசாரப் பன்முக சமுதாயத்தின் உறுப்பினராக வாழ நேர்ந்துள்ள மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையினாலே, மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும், சமமானவர்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள வேண்டும். பொது அணுகுமுறைகளைக் காண்பது நோக்கமாயிருக்க வேண்டும். இப்படியாக கல்வி, சமூகங்களுக்கிடையேயும், மனிதர்களுக்குள்ளும் சமாதானம், நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்தும் கருத்துகளையும் தீர்வுகளையும் ஒன்றுகூட்டுவதை ஊக்குவிப்பதாக, சுயஅடையாளங்களை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

9. வன்முறையில்லாமல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வலிமையை அது மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் சகிப்புணர்வு, பாசம், பகிர்ந்துகொள்ளுதல், (அடுத்தவர் பற்றிய) அக்கறை போன்ற மாண்புகளை இன்னும் வலுவாக உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படுகிற உள்மன அமைதி மேம்படுவதை வளர்க்க வேண்டும்.

10. அறிவார்ந்த தீர்மானங்கள் எடுக்கவும், சமகால நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் என்று மட்டுமின்றி எதிர்காலம் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் தமது முடிவுகளையும் செயல்களையும் தீர்மானிக்கவும் தேவையான திறமையை, கல்வி மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

11. கல்வியானது குடிகளுக்கு பண்பாட்டு மரபுகளை மதிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் , நிலைத்து நிற்கக்கூடிய (பொருளாதார) மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லக்கூடிய உற்பத்தி முறைகள், நுகர்வு இயல்புகள் ஆகியவற்றைக் கைக்கொள்ளவும் கற்றுத்தர வேண்டும்.
தனியார் மதிப்பீடுகள்- கூட்டு மதிப்பீடுகள் ஆகியவற்றிடையேயும், உடனடியான அடிப்படைத் தேவைகளுக்கும் நீண்டகால அக்கறைகளுக்கிடையேயும் ஒத்திசைவு காணுவதும் தேவையாகும்.

12. சமச்சீரான நெடுங்கால வளர்ச்சிக்கான நோக்கிலமைந்த, சமத்துவத்தையும் ஒற்றுமையையும் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் ஏற்படுத்தத் தேவையான உணர்வுகளை விதைப்பதாயும் கல்வி அமைய வேண்டும்.
உத்திகள்

13. இந்த இலக்குகளை நிறைவேற்ற, கல்வியமைப்புகளின் உத்திகளும் நடவடிக்கை விதங்களும் சீரமைக்கப்படுவதன் தேவை தெளிவானது. கற்பித்தல் முறை, நிறுவன நிருவாகம், இரண்டிலுமே இந்தச் சீரமைப்பு அவசியம் தேவை. மேலும் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி அளிப்பது, உலகளாவிய மனித உரிமை என்பதன் பிரிக்க முடியாத- பிரிக்கக்கூடாத பகுதியான மகளிர் உரிமை பேணுதல் ஆகிய இரண்டும் உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியில் அடிப்படையான அம்சங்களாகும்.

14. உலக அமைதி, மக்களாட்சி, மனித
உரிமைகள் பற்றிய கல்விக்கான உத்திகள்:
அ. விரிவான பார்வை கொண்டமைய வேண்டும். முழுமை கொண்டு விளங்க வேண்டும். அதாவது பலவகை அம்சங்களையும் தழுவி இருக்கவேண்டும். அவற்றில் சில அம்சங்களை பின்வரும் துணைப் பகுதிகளில் விவரமாகக் காண்போம்.
ஆ. அவை எல்லா வகையான, எல்லா நிலைகளுக்குமான, எல்லாவிதமான கல்விகளுக்கும் பொருந்தவேண்டும்.
இ. கல்வித்துறையில் பங்காளிகளாக உள்ள எல்லாரையும், சமூகமயமாக்கும் பணியிலும் உள்ள எல்லா அமைப்புகளையும் சமூக நிறுவனங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
ஈ. நகரளவில், நாட்டளவில், வட்டார அளவில் உலகளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
உ. கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி தரக்கூடிய வகைக்கு மேலான்மை முறைகளையும், நிர்வாகத்தையும், ஒருங்கிணைப்பையும், பணி மதிப்பீட்டையும் ஒழுங்கமைத்தலின்மூலம் அவை குறிப்பிட்ட வகையில் நடவடிக்கைத் திட்டங்களை ஏற்படுத்தவும், உள்ளூர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், மேம்பாட்டு புது உத்திகளை ஊக்குவிக்கவும், நிறுவனத்தின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் செயலூக்கத்தோடு மக்களாட்சி முறையில் பங்களிக்கச் செய்வனவாக அமைய வேண்டும்.
ஊ. யாருக்காகச் செய்கிறாமோ அவர்களது வயது மனநிலை ஆகியவற்றுக்கிசைய அமைய வேண்டும். பயில்வோர் ஒவ்வொருவரின் கற்கும் சக்தியின் பரிணாம வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எ. தொடர்ச்சி உடையனவாயும் முரணற்றவை யாயும் விளங்க வேண்டும். உத்திகளின் தடைகளும் பயன்களும் மதிப்பிடப்பட வேண்டும். மாறிவரும் சூழல்களுக்கேற்ப உத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்த மதிப்பீட்டு முறை உதவும்.
ஏ. பொதுவாக கல்வியிலும், குறிப்பாக ஓரம்கட்டப்
பட்டவர்கள், வசதியற்றோர், கல்வியிலும் மேற்
கண்ட இலக்குகளை அடையத் தேவையான ‘வசதிகள்’ பற்றியும் சிந்திக்க வேண்டும்.

15. மாறுதல்கள் எந்த அளவு தேவை,
செயல்பாடுகளுக்கிடையிலான முன்னுரிமைப் படுத்தல், எந்த வரிசையில் நடவடிக்கைகளை நடைமுறையில் மேற்கொள்ள வேண்டும் ஆகியவை பற்றிய முடிவுகளை இறுதி செய்யும் முன்பாக முடிவெடுக்கும் எல்லா மட்டங்களிலும் மாறுபட்ட வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டியல் மரபுகள், நாடுகள் வட்டாரங்களின் மேம்பாட்டு நிலைகள், நாட்டுக்குள்ளேயே கூட மேம்பாட்டு நிலையில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

16. முறையான கல்வியிலும் சரி, முறைசாராக் கல்வியலும் சரி, முறைசாராக் கல்வியிலும் சரி, எல்லா மட்டங்களிலும் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய பாடங்கள் இடம் பெறுவது தீவிர முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வியின் உள்ளடக்கம்

17. ஒற்றுமை, படைப்புத்திறன், குடிமைப் பொறுப்புணர்வு, வன்முறை தவிர்த்த வழிகளில் பூசல்களுக்குத் தீர்வு காணும் வலிமை, விமர்சன சக்தி போன்ற மாண்புகளை உருவாக்குவதை வலுப்படுத்த, எல்லா மட்டத்திலும் பாடத்திட்டத்தின் உலகளாவிய பரிமாணங்கள் கொண்ட குடிமைக்கல்வி இடம் பெற வேண்டியது அத்தியாவசியமாகும். உலக அமைதியை உருவாக்கும் கூறுகள் பற்றிய அக்கறைகள் கல்விக்கு இருக்க வேண்டும். பல்வேறு மோதல்கள், அவற்றின் காரணங்களும் விளைவுகளும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தையும், மகளிர்க்கெதிரான சகலவகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, குழந்தைகள் உரிமை பற்றிய உடன்படிக்கை, போன்ற தேசிய சர்வதேசிய நிர்ணயிப்புகள் ஏற்பட்ட விதம், மக்களாட்சியின் அடிப்படைகள், இனவாதம், பெண்ணியப் போராட்ட வரலாறு, மற்ற பாகுபாடுகளையும் ஒதுக்குமுறைகளையும் எதிர்க்கும் இயக்க வரலாறுகள் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையும் கல்வியைத் திட்டமிடுவதில் இருக்கவேண்டும். பண்பாடு, மேம்பாடு தழுவிய சிக்கல்கள், இனங்களின் வரலாறுகள், அய்நா. முதலிய உலக அமைப்புகளின் பங்கு பணி பற்றியெல்லாமும் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும். அமைதி, மக்களாட்சி, மனித உரிமை பற்றியெல்லாம் கல்வி அமைய வேண்டும். விசேஷமான பாடங்களுக்கு மட்டுமே அழுத்தம் தருவதாக இருக்கக்கூடாது. கல்வி குறுக்கப் படலாகாது.

இந்தச் செய்திகளைப் பரப்புவதாகவே கல்வி முழுவதும் அமைய வேண்டும். அதுபோலவே பாடநூல் சீர்திருத்தமும் உலக அளவிலும் தேசிய அளவிலும் மற்றவர் பண்பாட்டுக் கூறுகளை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் அறிவைத் திருப்பிவிடும் போக்கில் அமைய வேண்டும். உள்ளூர் சிக்கல்களையும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதையும் இணைப்பதாக பாடநூல்கள் இருக்க வேண்டும் நாட்டுக்கு நாடு மதமும் பண்பாடும் மாறுவதால் அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு எத்தகைய அறநெறிக் கல்வி பொருந்தும் என்பதை நாடுகள் ஒவ்வொன்றும் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிறவனத்தின் சூழ்நிலையும் மக்களாட்சி மாண்புகளுக்கு இசைந்ததாக இருந்திட வேண்டும்.
கற்பிக்கும் கருவிகளும் வசதிகளும்

18. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரிடமும் அவர்கள் வசம் போதுமான கல்விக் கருவிகளும் வசதிகளும் இருக்க வேண்டும். எதிர்மறையான உருவகிப்புகளையும் ‘மற்றவர்கள்’ பற்றிய காமாலைப் பார்வையையும் தவிர்க்கும் வகையில் தேவையான மாற்றங்களைப் பாடநூல்களில் கொண்டு வருவது அவசியம். பாடநூல் தயாரிப்பில் பன்னாட்டுக் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாடநூல்களும் கல்விக் கருவிகளும் பிறவும் புதிதாகத் தயாரிக்கப்படும்போதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழல் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். குறித்த பொருள் பற்றிப் பேசும்போது பாடநூல்கள் அதன் பல பரிமாணங்களையும் பேச வேண்டும். அந்த நூல் எந்தப் பண்பாட்டின்/தேசியத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புலப்படுத்தப்பட வேண்டும். யுனெஸ்கோ, அய்.நாவின் பிற அமைப்புகள் ஆகியவற்றின் ஆவணங்கள் கல்விக்கூடங்களில் பரவலாகப் பரப்பப்படுவதும் பயன்படுவதும் விரும்பத்தக்கதாகும். அதிலும் குறிப்பாக பொருளாதாரக் காரணங்களினால் கல்விக் கருவி உற்பத்தி விரைவாக இல்லாத நாடுகளில் இது மிகவும் விரும்பத்தக்கது.. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி பற்றிய கல்விக்காக தொலைதூரக் கல்விக்கான தொழில்நுட்பங்களும், நவீன தகவல் தொடர்பு முறைகளும் ஏற்படுத்தித் தரப்படவேண்டும். l

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

 



 மார்ச் 16-31, 2024

பிப்ரவரி 16-29 இதழின் தொடர்ச்சி…

அந்நிய மொழிகளைப் படிக்கவும், பயன்படுத்தவும், பேணவுமான திட்டங்கள்

19. உலக அமைதி, மக்களாட்சி. மனித உரிமைகள் பற்றிய கல்வியின் மேம்பாட்டுக்கு எழுத்து, படிப்பு, பேச்சு ஆகியவை தொடர்பான
திட்டங்கள் சரியான அளவு வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம். தகவல் அறியவும்,
நாம் வாழும் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தேவைகளைத் தெரியப்படுத்தவும், சமூக சுற்றுச்சூழலில் நடைபெறும் நடவடிக்கைகளில் பங்கு பெறவும் எப்படி எழுதவும், படிக்கவும், பேசவும் விரிவான பயிற்சி இருப்பது மிகவாக உதவுகிறதோ அப்படி அயல்மொழி அறிவும் மற்றப் பண்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவு பெறவும் ஒரு வழியாகிறது. சமுதாயங்களிடையிலும் நாடுகளிடையிலும் நல்லவிதமான புரிந்துக்கொள்ளுதலை உருவாக்க இது அடித்தளம் அமைக்கிறது. யுனெஸ்கோவின் லிங்குவா பாக்ஸ் (மொழி மூலமாக அமைதி) திட்டம் அந்த வகையில் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

கல்விக்கூடங்கள்

20. கல்வித்துறை மாற்றங்களுக்கு இயல்பான உரிய இடம் பள்ளிகளும் வகுப்பறைகளும் ஆகும். கற்பிக்கும் – கற்கும் முறைகள், நடவடிக்கை முறைகள், நிறுவனக் கொள்கைகள் ஆகியவை உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றை அன்றாட வாழ்வின் பழக்கமாக ஆக்கவேண்டும். கற்றுக் கொள்ளக்கூடிய பாடமாகவும், காட்டவேண்டும். முறைகளைப் பொறுத்தவரை, தீவிர முறைகளைப் பயன்படுத்துதலும், குழுவாக வேலை செய்தலும், தார்மீக விஷயங்களை விவாதித்தலும் நேருக்கு நேராகப் பயிற்றுவித்தலும் ஊக்குவிக்கப்படுவதற்குரியன. அதேபோல், நிறுவனக் கொள்கைகள் தளத்தில் திறமையான மேலாண்மை முறைகளும் பங்கெடுத்தலும் மக்களாட்சி பூர்வமாக பள்ளி நிருவகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர், பெற்றோர், மாணவர் – ஏன் ஒட்டுமொத்த சமூகமும் அதில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

21. வெவ்வேறு நாட்டையும், வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலத்தையும் சேர்ந்த மாணவர், ஆசிரியர், பிற கல்வியாளர்கள் ஆகியோரிடையே நேரடியான சந்திப்புகளும் பரிமாற்றங்களும் ஊக்குவிக்கப்படவேண்டும். பரிசோதனைகளும் புதிய முயற்சிகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இடங்களுக்கு பிறர் சென்று பார்க்க வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் குறிப்பாக பக்கத்து நாடுகளுக்குள் நடத்தப்படுவது நன்று. பொதுவான சிக்கல்களைத் தவிர்ப்பது குறித்து வெவ்வேறு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலும் கல்விக்கூடங்களுக்கு இடையிலும் இணைந்து பணி செய்யும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நோக்கத்தில் ஒன்றுபடும் பள்ளிச் சிறார், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் இணையங்களைச் சர்வதேச அளவில் உண்டாக்க வேண்டும். அத்தகைய இணையங்களில் பாதுகாப்பின்மைக்கோ, தீவிர வறுமைக்கோ ஆளான பள்ளிகள் இடம்பெற முன்னுரிமை காட்டப்படவேண்டும். இதனை நெஞ்சிலிருத்தி யுனெஸ்கோவின் இணைக்கப்பட்ட பள்ளிகள் அமைப்பினை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் அவசியமாகும். இந்தவித நடவடிக்கைகள் யாவும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டங்களின் பகுதியாக இருக்கிற வசதிக்குத் தக்கவாறு துவக்கப்பட வேண்டும்.

22. தேறாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். எனவே, தனியொரு மாணவனின் சக்திக்கேற்ப கல்வி நீக்கப்போக்குடன் கூடியிருக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்ச்சியிலும் கல்வியிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியினை வலுப்படுத்தலும் சமூக ஒருமைப்பாட்டினை அடைவதில் கணிசமான முறையில் அடிப்படைத் தேவைகளாய் உள்ளன. பள்ளிகட்கு அதிக சுயாட்சி என்னும்போது, கல்வியின் வெற்றிக்கு சமுதாயமும் ஆசிரியர்களும் அதிகப்படி பெறுப்பேற்க வேண்டும் என்பதும் உட்பொருளாய் விளங்குகிறது. கல்வி அமைப்புகளின் மேம்பாட்டு அளவுகளுக்கிடையில் வேறுபாடு இருப்பதால் அதை வைத்தே சுயாட்சியின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லையேல் கல்வியின் உள்ளடக்கம் பலவீனமடைய நேரிடலாம்.

ஆசிரியர் பயிற்சி

23. ஆசிரியர், நிர்வாகியர், திட்டமிடுவோர், ஆசிரியப் பயிற்சியாளர்கள் என்று கல்வியமைப்பின் எல்லாத்தளத்தில் பணிபுரிகின்றவர்களுக்கும் தரப்படும் பயிற்சிகளில் சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வியும் இடம்பெறவேண்டும். அத்தகைய பணிக்கு முந்தைய, பணியில் பொதித்த பயிற்சிகள், மறு பயிற்சிகள் ஆகியவை நிகழிடத்தில் உள்ள முறைகள், சோதனைகளைக் கவனித்தல், பயன்களை மறு மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை அறிமுகம் செய்து நடத்திப் பார்க்க வேண்டும். தமது பணிகளைச் செவ்வனே முடிக்க பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், முறை சாராக் கல்வித்திட்டங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர், சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் (அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், சமூக இயல்/மன இயல் அறிஞர்கள் ஆகியோர்) உதவியையும் மனித உரிமைப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் அரசுசாரா அமைப்புகளின் உதவியையும் நாடவேண்டும். எல்லாவித கற்பிப்போர்களுக்கான பயிற்சிகளிலும் ஒரு பகுதியாக மனித சக்திப் பரிமாற்றங்களும் கற்பிக்கும் கலையும் இடம்பெறவேண்டும்.

24. ஆசிரியப் பணியை மேம்படுத்திக்கொள்ளும் விரிவானக் கொள்கையில் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் செவ்வனே பொருந்த வேண்டும். சர்வதேச மேதைகள், ஆசிரியர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஆகியோர் நடவடிக்கை முயற்சிகளை தயாரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களிடையிலேயே அமைதிக் கலாச்சாரத்தைப் பரப்புவதில் அவர்களுக்கெல்லாம் முக்கியப் பங்கு இருக்கிறது.
பலவீனமான பகுதியினருக்கான நடவடிக்கைகள்

25. பலவீனமான பகுதியினர், அண்மையில் பூசல்களுக்கு இடையில் வாழ நேர்ந்தோர், போர்சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டோர் ஆகியோருக்கு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயத்தேவை. விளிம்பில் வாழும் குழந்தைகளும் பால்முறை வன்முறைக்கோ பிற வன்முறைக்கோ ஆளான மகளிர்- சிறுமியர் ஆகியோருக்கும் சிறப்புக் கவனம் அத்தியாவசியம். கல்வியாளர்களுக்கும், போரிடும் குழுக்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக பூசல்களங்களுக்கு வெளியே பயிற்சிப் பட்டறைகளும் சிறப்பு மையங்களும் அமைத்தல், போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் கல்வியாளருக்கு சிறப்புப் பயிற்சி தருதல் ஆகியவற்றை நடைமுறையில் இயலக்கூடிய நடவடிக்கைகளுக்கு உதாரணங்களாகக் கூறலாம். இயன்ற இடமெல்லாம் இத்தகு முயற்சிகளை அரசாங்கக் கூட்டுறவுடன் மேற்கொள்ளல் நலம்.

26. கைவிடப்பட்ட குழந்தைகள், வீதிகளில் உள்ள குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள், பொருளாதார ரீதியாகவோ பால் அடிப்படையிலோ வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள், குழந்தை அகதிகள் முதலியவர்களுக்காக கல்வித்திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுதல் அவசரத் தேவையாகும்.

27. சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும், ஒருங்கிணைவு நடவடிக்கைகளிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பங்கு பெறுவதை வலியுறுத்தும் இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்வதும் அதே அளவுக்கு அவசரமானதாகும்.

28. மேலும், கல்வி பயில்வதில் சிரமங்கள் கொண்டோர் (இது மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறிக்கலாம்)களின் வித்தியாசமான தேவைகள் குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திவிடாமல், ஒருங்கிணைந்த கல்விச் சூழலிலேயே அவர்களுக் குரிய வகையான கல்வியை அளிப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.

29. அத்தோடுகூட சமூகத்தின் பல்வேறு குழுவினர்க்கு இடையிலும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கலாச்சார இன-சமய மொழி சார்ந்த சிறுபான்மையினர், ஆதிகுடிகள் ஆகியோரின் கல்வி உரிமைகளுக்கும் மரியாதை இருக்கவேண்டும். பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், கல்வி வசதி ஏற்படுத்தப்படும் விதம் ஆகியவற்றில் இந்த அக்கறையும் எதிரொலிக்க வேண்டும்.
ஆராய்ச்சியும் மேம்பாடும்

30. சிக்கல்கள் புதியனவாயிருக்கும்போது தீர்வுகளும் புதிதாய்க் காண வேண்டியிருக்கிறது. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமை ஆகியவை பற்றிய கல்வியின் சிக்கலான இயல்பைப் பயனுள்ள முறையிலும் அதற்கேற்ற முறையிலும் எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்துவதற்கான உத்திகளைக் கண்டாக வேண்டும். புதிய கற்பிப்பு முறைகளையும், புது அணுகல் நெறிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். சமூகப் பாடங்களில் ஆய்வு செய்யும் நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றிடையே ஆய்வுக்கான விஷயங்களைத் தெரிந்தெடுப்பதில் ஒருங்கிணைப்பை அதிகப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் (அரசாங்கம், பெற்றோர், ஆசிரியர், இன்ன பிறர்) ‘முடிவெடுத்தல்’ குறித்த ஆய்வுகள் நிகழ்த்தி அதன்மூலம் கல்வி நிருவாகம் பயனுள்ள முறையில் நடப்பதை மேம்படுத்த வேண்டும். மனித உரிமைகள் அதிலும் மகளிர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி மனிதர்களின் அணுகுமுறையை மாற்றுவதற்கான புதிய வழிகளைக் காணுவது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முடிவுகளை அளந்து அறிவிக்கும் காரணிகளையும் அமைப்பையும் உருவாக்குதல்,
அ. புதுமையான பரிசோதனைகள் குறித்து விபர வங்கிகள் அமைத்தல்,
ஆ. ஆராய்ச்சி முடிவுகளையும் பிற தகவல்களையும் பரப்பவும், பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை மூலம் கல்வித் திட்டங்களின் பலாபலன்களை நன்றாக அனுமானிக்கலாம்.

உயர்கல்வி

31. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய கல்வியில் உயர்கல்வி நிறுவனங்கள் பல வழிகளில் பங்களிக்கலாம். இந்தத் துறையில், உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் நியாயம், தொழில் நியாயங்கள், குடிமைக் கடப்பாடுகள், சமூகப்பொறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புள்ள திறமைகள், மதிப்பீடுகள், அறிவு ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும். உலகமே நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசுகள் ஒன்றையொன்று மேன்மேலும் சார்ந்திருப்பதை மாணவர்கள் உணர்வதையும் உயர்கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வித் துறைக்கும் பிற சமூக இயல் ஊக்கிகளுக்கும் ஒருங்கிணைப்பு

32. குடிகளின் கல்விக்குக் கல்வித்துறை மட்டுமே முழுதும் பொறுப்பல்ல. அது இப்பணியினைப் பயனுள்ள முறையில் செய்வதற்கு, குறிப்பாக குடும்பம், மரபுசார் தகவல் அமைப்புகள் உள்ளிட்ட தகவல் ஊடகங்கள், தொழில்துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

33. பள்ளிக்கும் குடும்பத்துக்குமிடையே ஒருங்கிணைவுக்கு, பள்ளி செயல்பாடுகளில் பெற்றோர் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், வயதுற்றோருக்கும் பொதுவாக ஊரார் அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டங்களை வரைந்து செயலாக்குவதும் பள்ளியின் பணியை வலுப்படுத்துவதற்கான அவசியத் தேவையாகும்.

34. குழந்தைகளையும் இளைஞர்களையும் சமூக அங்கமாக ஒருங்கிணைப்பதில் செய்தி ஊடகங்களின் தாக்கத்தை அனைவரும் ஒப்புக்கொள்வது வளர்ந்து வருகிறது. எனவே, விமர்சனக் கண்ணோடு ஊடகங்களின் பணியை அலசவும் அவற்றால் பயனடையவும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதும் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதும் அவசியமாகிறது. இதற்கும் இவ்வூடகங்களினால் பயனடைவதில் திறமையை வளர்த்துவிடவும் சில தெரிந்தெடுத்த திட்டங்கள் தேவைப்படுகின்றன. அதேசமயம், குறிப்பாக வெறுப்பையும், வன்முறையையும், கொடுமையையும், மனித கவுரவத்துக்கெதிரான அவமரியாதையையும் தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் அமைதி, மனித உரிமைக்கு மரியாதை தருதல், மக்களாட்சி, சகிப்புத்தன்மை முதலிய மாண்புகளை வளர்க்குமாறு இவ்வூடகங்களையும் வலியுறுத்தவேண்டும்.

இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் முறைசாராக் கல்வி

35. மனித உரிமைகள், மக்களாட்சி, உலக அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதில், பள்ளிக்கு வெளியே நீண்ட நேரம் செலவிடுவோர், முறையான கல்விக்கான வாய்ப்பற்றோர், தொழில்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பற்றோர், பட்டாளத்தில் உள்ளோர் ஆகியோர் சரியான இலக்காக அமைவர். முறையான கல்விக்கும் தொழிற்பயிற்சிக்கும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, முறைசாராக்கல்வி மூலம் பயனடைவது ஏற்புடையது. அவர்களது தேவைகளுக்கேற்ப உருவமைக்கப்படுமானால், முறைசாராக் கல்வியே அவர்கள் பொறுப்புள்ள
வர்களாக, பயனுள்ள வகையில் குடிமக்கள் என்ற தளத்தில் தம் கடமைகளை ஆற்ற ஆயத்தப்படுத்திவிடும்.
உலக அமைதி, மனித உரிமைகள், சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றை சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகள், சிகிச்சையகங்களில் உள்ள சிறுவர் சிறுமியர்க்கும் கற்றுத்தர வேண்டும்.

36. அரசு சாரா அமைப்புகள் சிறப்பாகப் பங்களிக்கக்கூடியதான முதியோர் கல்வித் திட்டங்கள் உள்ளூர் வாழ்க்கை நிலைமைக்கும் உலகப் பிரச்சினைகளுக்கும் உள்ள சங்கிலியை அனைவரும் உணரச் செய்ய வேண்டும். உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய பாடங்களுக்கு அடிப்படைக் கல்வித் திட்டங்கள் குறிப்பான முக்கியத்துவமளிக்க வேண்டும். நாடோடிக் கதைகள், நாடகங்கள், சமூக விவாத அரங்குகள், வானொலி போன்ற பொருத்தமான கலை வடிவங்கள் யாவும் விரிவான அளவிலான ‘மக்கள் கல்வி’க்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

வட்டார அளவிலும் நாடுகளுக் கிடையிலும் ஒத்துழைப்பு

37. சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வளர்த்தெடுப்பதற்கு, வட்டார ஒத்துழைப்பு, சர்வதேச ஒற்றுமை, சர்வதேச அமைப்புகள் – அரசாங்கம் – அரசுசாரா அமைப்புகள் அறிவியலார் உலகம், வணிகர் வட்டம், தொழில்துறை, தகவல் ஊடகங்கள் ஆகியவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியன தேவைப்படுகின்றன. இந்த ஒன்றுகூடலும் ஒத்துழைப்பும் வளரும் நாடுகள் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றைக் கற்பிப்பதை வளர்ப்பதற்கான தேவையை நிறைவு செய்துகொள்ள உதவ வேண்டும்.

38. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறைக்கு செயல்வடிவம் தரும் முயற்சிகளுக்கு உதவியாக யுனெஸ்கோ தனது நிறுவன ரீதியான திறமைகளைத் தந்துதவ வேண்டும். குறிப்பாக, வட்டார அளவிலும் உலகளவிலுமான தனது புதுமைகள் இணையத்தை இப்பணிக்குப் பயன்படுத்தச் செய்ய வேண்டும். ‘இணைத்துக் கொள்ளப்பட்ட பள்ளிகள் திட்டம்’ யுனெஸ்கோ சங்கங்கள், யுனெஸ்கோ மன்றங்கள், யுனெஸ்கோ கல்வி நிலையங்களுக்கான ஆய்வுரை, அறக்கட்டளை ஏற்பாடுகள், ஆப்பிரிக்கா – ஆசியா பசிபிக் – லத்தீன் அமெரிக்கா – கரீபியன்- அரபுநாடுகள்- அய்ரோப்பா ஆகிய இடங்களுக்கான பெரிய கல்வித்திட்டங்கள், ஜமேதியன் உலக மாநாட்டையடுத்த தொடர் நடவடிக்கைகளுக்கான அமைப்புகள்- குறிப்பாக, கல்வி அமைச்சர்களின் வட்டார மாநாடுகள், உலகளாவிய மாநாடுகள் ஆகியவை குறிப்பான பங்களிப்பு செலுத்த வேண்டும். இம்முயற்சிகளில் – குறிப்பாக தேசிய அளவில் – அந்தந்த நாட்டிலுள்ள யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையங்கள் உத்தேச நடவடிக்கைகளின் பயனுறுத்தன்மையை வளர்க்க ஒரு பெரும் அருட்கொடையாக அமைய வேண்டும்.

39. வட்டார அளவிலும், உலகளவிலும் நிகழவிருக்கும் உச்சநிலைக் கூட்டங்களில் இந்தத் திட்டவரையறையைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை யுனெஸ்கோ எழுப்ப வேண்டும்; கல்வியாளர்களின் பயிற்சிக்கான திட்டங்களை வரைய வேண்டும்; நிறுவனங்களின் இணையங்களை உருவாக்க வேண்டும் – வலுப்படுத்த வேண்டும்; கல்வித்திட்டங்கள், முறைகள், கருவிகள் பற்றியெல்லாம் ஒப்பீட்டுமுறை ஆராய்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவை பற்றிய கல்வி மீதான பிரகடனத்தில் பேசப்பெறும் கடப்பாடுகளுக்கு ஏற்ப திட்டங்கள் முறையாக கால ஒழுங்குப்படி மதிப்பீடு செய்யப்படவும் வேண்டும்.

40. உலகளாவிய நடவடிக்கைத் திட்டமொன்றை உருவாக்க வசதியாயும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னுரிமை வேலைகளை முடிவு செய்ய வசதியாகவும் இந்தத் துறையிலும் அய்.நா.வின் ‘உலக அமைதிக்கான செயல்நிரல்’, ‘மேம்பாட்டுக்கான செயல் நிரல்’, ‘செயல் நிரல்-21’, ‘’, ‘மகளிர் பற்றிய நான்காவது உலக மாநாடு’ ஆகியவற்றின் வரிசையில் அய்.நா. சார்ந்த மற்ற நிறுவனங்களின் உதவியுடனும் பிற வட்டார சர்வதேசசமூக உச்ச மாநாடு நிறுவனங்களின் உதவியுடனும் இந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்ப முயற்சிகளைத் துவக்க வேண்டும். அவற்றில் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய கல்விக்கான பன்னாட்டுக் கூட்டுறவுக்காக யுனெஸ்கோ மேலாண்மையின்கீழ் ஒரு நிதியம் அமைக்கலாம்.

41. இந்தச் செயல்திட்ட வரையறையை நடைமுறைப்படுத்துவதில் தேசிய அளவிலான அரசுசாரா அமைப்புகளும் உலகளாவிய அரசுசாரா அமைப்புகளும் தீவிரமாக பங்கெடுப்பது ஊக்குவிக்கப்படவேண்டும். 

பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

 



 பிப்ரவரி 01-15, 2024

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் விருப்பக் குறிப்பேடு ஆகியவையும் சேர்ந்து ஆக அய்ந்து ஆவணங்களும் சேர்ந்த தொகுதி சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. பார் முழுதும் மனித உரிமைகளைப் பரப்பவும் பாதுகாக்கவும் தளம் அமைத்துத்தரும் இந்த அய்ந்தொகையே அடிப்படை ஆவணமாகும். பன்னாட்டுப் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை அய்.நா. பொதுச் சபையால் 16.12.1966 அன்று நிறைவேற்றப்பட்டது. 3.1.1976 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து சில பகுதிகள்:

முகப்புரை:

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், அய்.நா. மன்ற அமைப்புத் திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
– இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

– மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குதன் மூலமே அடையப்பட முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும், அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும்.

தனிமனிதன் பிற தனிமனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.

பகுதி 1
விதி 1

1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம்போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக் கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.

2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் நமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பகுதி 2
விதி 2
1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் சர்வதேசக் கூட்டுறவு உதவியோடும் தன்னனளவிலும், தன் சக்திக்கு உயர்ந்த பட்சம் முடிந்த அளவுக்கு படிப்படியாக இவ்வுரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு இசைவாக சட்டமியற்றுதல் உள்ளிட்ட இயன்ற வகை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்று உறுதி பூணுகிறது.
2. அத்துடன் இதில் கூறப்படும் உரிமைகள் யாவும் இனம், நிறம், பால், மொழி, மதம் என்ற எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல், அரசியல், கொள்கை பேதங்களும் பாராமல் தேசியம் எது எந்த சமூகம் என்றும் பிரிக்காமல் பிறப்பு சொத்து, சமூக நிலை எதையும் பாராமல் நிறைவேற்றப்பட உத்தரவாதமும் அளிக்கிறது.
3. பொருளாதார உரிமைகளைப் பொறுத்தவரை, வளரும் நாடுகள் மனித உரிமைகளையும் கருத்தில்கொண்டு தத்தம் தேசிய பொருளாதாரத்துக்கும் உரிய கவனம் செலுத்தி, இங்கு கூறப்பெறும் பொருளாதார உரிமைகளை பிறநாட்டவருக்கு எந்த அளவு அனுமதிப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

விதி 3

இதில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இங்கு இடம்பெறும் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் அனைத்தையும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக அனுபவிப்பர் என்று உத்தரவாதமளிக்கிறது.

விதி 4

இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இதன்படி தான் வகை செய்யும் சுதந்திரங்களை அனுபவிப்பதில் அந்த உரிமைகளுக்கு ஒரு ஜனநாயக நாட்டின் பொது நன்மையைப் பேணுவதற்கு மட்டுமே- அந்த உரிமைகளோடு ஒத்திசைவு கொண்ட அளவு மட்டுமே- அதுவும் சட்டபூர்வமாக மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறது.

பகுதி 3
விதி 6

1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் வேலைசெய்யும் உரிமையை ஒப்புக்கொள்கிறது. அதில் ஒவ்வொருவரும் தான் விருப்பப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட வேலையைச் செய்து அதன்மூலம் வாழ்வு நடத்திக்கொள்ளும் உரிமையும் அடங்கும். இவ்வுரிமையைப் பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
2. இந்த உரிமையை மக்கள் முழுதாய் அனுபவிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தொழில்நுட்பம், செய்வினை ஆகியவற்றில் வழிகாட்டல் பயிற்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல், சமூக- கலாச்சார வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், தொழில்நுட்பம் ஆகியவையும் அடிப்படையான அரசியல் பொருளாதார சுதந்திரங்களைப் பாதுகாக்கும் சூழலில் பயனுள்ள முழு வேலை வாய்ப்புக்கு வகை செய்யும்படி செய்தல், ஆகியவையும் அடங்கும்.

 

விதி 7

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள நியாயமான, கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமையை ஒப்புக் கொள்கின்றன. அந்தச் சூழல் குறிப்பாக-

அ. ஊதியம் எல்லாருக்கும் குறைந்த பட்சமாக
(I) நியாயமான ஊதியமாயும், சமவேலைக்கு சம ஊதியமாயும் அமைய வேண்டும்; எந்தவித பேதமும் இருக்கக்கூடாது. குறிப்பாக, ஆண்களுக்குக் கிடைக்கும் கண்ணியமான சூழலுக்குக் குறைவானதாகப் பெண்களுக்கு இருக்கக்கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் அவர்களுக்கும் வேண்டும்.
(II) இவ்வுடன்படிக்கைக்கு இணங்க, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நாகரிகமாக வாழப் போதுமானதாக இருக்கவேண்டும்.
ஆ. பாதுகாப்பும் ஆரோக்கியமும் காப்பற்றப்பட வேண்டும்.
இ. இருக்கும் நிலையிலிருந்து நியாயப்படியான பதவி உயர்வுகளுக்கான வழிவகைகளை எல்லாருக்கும் செய்யப்பட வேண்டும். தகுதி, வேலையில் அனுபவம் தவிர வேறு எந்தக் காரணத்தாலும் பேதம் பாராட்டப்படக்கூடாது.
ஈ. ஓய்வு, பொழுதுபோக்கு, வேலைநேரம் பற்றிய நியாயமான வரம்புகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பொதுவிடுமுறை நாட்களுக்கு ஊதியம் ஆகியவற்றுக்கு உறுதியளிக்க வேண்டும்.

விதி 8

அ. ஒவ்வொருவருக்கும் தனது சமூக பொருளாதார உரிமைகளைப் பேணவும் பெறவும் வேண்டி தொழிற்சங்கம் அமைக்கவோ, தனக்குப் பிடித்த சங்கத்தில் சேரவோ உரிமை உண்டு; தான் சார்ந்துள்ள நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக இல்லாமலிருந்தால் சரி.
ஆ தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் சம்மேளனங்களாகவோ கூட்டமைப்பாகவோ இயங்கவும், அவை சர்வ தேசிய அளவில் கூட்டமைப்பாக இயங்கவும் உரிமை உண்டு.
இ. தேசப் பாதுகாப்பு நலன்கள், பொது அமைதி, மற்றவர்களின் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடுக்கண் வராமல் பார்த்துக்கொள்ள ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டம் விதிக்கக்கூடிய தேவையான கட்டுப்பாடுகள் தவிர வேறு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இயங்க தொழிற்சங்கங்களுக்கு உரிமையுண்டு.
ஈ. குறிப்பிட்ட நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை உண்டு.
இங்குக் கூறிய (அ) முதல் (ஈ) வரையான உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கவும் இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன.

விதி 9

ஒவ்வொருவருக்கும் சமூகக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புரிமை இருப்பதை இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் அங்கீகரிக்கின்றன.

விதி 10

அ. சமூகத்தின் அடிப்படையான, இயற்கையான மூலக்கூறான குடும்பத்துக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பும் உதவியும், அளிக்கப்படுதல்; குறிப்பாக குடும்பம் அமைக்கப்படுவதில் சிறு குழந்தைகளின் நலத்துக்கும் கல்விக்கும்கூட அரசு பொறுப்பு. திருமணம் என்பது இருவரின் கருத்தொருமிப்போடுதான் நிகழவேண்டும்.

. மகப்பேறுக்கு முன்பும் அதன்பின்பும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தாய்மார்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அந்தக் காலகட்டத்தில், பணியாற்றும் தாய்மார்களுக்கு ஊதியத்தோடு விடுமுறையோ போதுமான சமூகப் பாதுகாப்பு வசதிகளோ இருக்கவேண்டும்.

இ. பிறப்பினாலோ வேறு எக்காரணத்தாலுமோ வேறுபாடுகள் பார்க்காமல் குழந்தைகள், இளைஞர்கள் அனைவருக்கும் பாதுகாப்பும் உதவியும் தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமூக- பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவேண்டும். அவர்களது ஆன்மிக வளர்ச்சி, சுகாதாரம் முன்னேற்றம், உயிர் ஆகியவற்றுக்கு ஊறுவிளைக்கக்கூடிய தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். அரசுகள் குறைந்தபட்ச வயது வரம்பு சட்டங்கள் இயற்றி, அந்த வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாளர்களாக நடத்துவதையும் தடைசெய்து தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்.

விதி 11

1. இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், உணவு, உடை, உறையுள் உட்பட தனக்கும் குடும்பத்துக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்துக்கும் வாழ்நிலைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் அனைவருக்கும் உரிமை உண்டென்று அங்கீகரிக்கின்றன. இவ்வுரிமை நடைமுறைப்படுத்தப்படவும் அவை உரிய நடவடிக்கைகள் எடுக்கும். சம்மதத்துடன் கூடிய பன்னாட்டுக் கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் அவை உணர்ந்துள்ளன.

2. தனி ஒருவனுக்கு உணவில்லை எனும் கொடுமையிலிருந்து ஒவ்வொருவனுக்கும் பாதுகாப்பு உரிமை உண்டென்பதையும் ஏற்று இவ்வரசுகள் தன்னளவிலும், பன்னாட்டுக் கூட்டுறவோடும் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக திட்டவட்டமான நடவடிக்கைகளும் பிற செயல்பாடுகளும் மேற்கொள்ளும்:

அ. தொழில்நுட்ப அறிவியல் கல்வியை முழுதும் பயன்படுத்தி உணவு உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம் ஆகியவற்றின் முறைகளில் முன்னேற்றம் காணுதல், சத்துணவுத் தத்துவங்கள் பற்றிய அறிவினைப் பகிர்ந்து கொள்ளுதல் இயற்கை வளத்தை உயர்ந்தபட்ச அளவு வளப்படுத்தவும் பயன்படுத்தவும் உதவும் வண்ணம் வேளாண்மை முறைகளைச் சீர்திருத்துதல், நவீனமாக்குதல்.

. உணவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யும் நாடுகள் என்ற இருபாலாருக்கும் சிரமமில்லாத வகையில் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைத் தேவைக்கேற்ப நியாயமாகப் பங்கீடு செய்தல்.

விதி 12

1. ஒவ்வொருவருக்கும் உயர்ந்தபட்ச உடல்நலம், மனநலம் அனுபவிக்க உள்ள உரிமையையும் இவ்வுடன்படிக்கையில் ஈடுபடும் அரசுகள் அங்கீகரிக்கின்றன.
2. அதை மக்கள் அனுபவிக்க இசைவாக இந்த அரசுகள் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

. இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைச் சாவுகள் ஆகியவற்றைக் குறைத்தல்- குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி.

. சுற்றுச்சூழல், தொழிற்சாலை, சுகாதாரம் ஆகியவற்றை அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றுதல்

. தொற்றுநோய்கள், கொள்ளை நோய்கள், தொழில் தொடர்பான நோய்கள் முதலியவற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், சிகிச்சை வசதி பெருக்குதல்,

. வியாதிகளுக்கு மருத்துவர் கவனிப்பு உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் நிச்சயம் கிடைக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல்.

விதி 13

1. இவ்வரசுகள் ஒவ்வொருவருக்கும் உள்ள கல்வி உரிமையை அங்கீகரித்து கல்வி மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கும் மானிட மாண்புக்கும் அடிகோலுவதுடன், மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றன. ஒரு சுதந்திர சமுதாயத்தில் பலனுள்ள முறையில் பங்களிப்புச் செய்யவும் நாடுகளுக்கிடையிலும் எல்லா இன, கலாச்சார, மதப்பிரிவின் மக்களிடையிலும் சகிப்புத்தன்மையும் நட்பும் துளிர்க்கவும், உலக சமாதானத்துக்காகன அய்.நா. முயற்சிகள் வலுப்பெறவும் வையத்து மாந்தருக்கெல்லாம் கல்வி வழி காட்டித்தரவேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கின்றன.

2. மேற்படி உரிமை முழுவதும் செயல்படுத்தப்பட கீழ்க்கண்ட பணிகள் செய்யப்பட வேண்டுமென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன:-

அ. கட்டாய ஆரம்பக் கல்வி எல்லாருக்கும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என்பதையும்,
. இரண்டாம் நிலைக்கல்வி- தொழில்நுட்பம், வேலைவாய்ப்புக் கல்வி உள்பட பொதுவாக எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாயும், செலவு கட்டுப்படியாகக் கூடியதாயும் அமைய வேண்டும். படிப்படியாக இடைநிலைக் கல்வி முழுவதையுமே அரசு செலவில் கிடைக்கச் செய்வது உள்பட இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இ. இதேபோல் உயர்கல்வியும் தகுதிக்கேற்ப எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஈ. ஆரம்பக்கல்வி பெறாதவர்கள் அல்லது முடிக்காதவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஆதாரக்கல்வி தீவிரப்படுத்தப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உ. எல்லா நிலையிலும் கல்விக்கூடங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவேண்டும். போதுமான ஆசிரியர் குழுக்கள் வேண்டும். தொடர்ந்து ஆசிரியர்களின் பணிநிலைச்சூழல் வலுப்படுத்தப்படவேண்டும்.

3. பெற்றோர் அல்லது காப்பாளர் தம் குழந்தைகளுக்காக, அரசு நடத்தும் பள்ளிகளுக்கு வெளியேகூட பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டென்பதை இவ்வரசுகள் மதிக்கின்றன. அவை அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சக் கல்வித்தரம் உள்ளவையாக இருக்கவேண்டும். தத்தம் மதத்துக்கு ஏற்ற தார்மீகக் கல்விக்காக பெற்றோர் இத்தகைய பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. இவ்விதியின் எந்தப் பகுதியும் தனியாரோ, நிறுவனங்களோ பள்ளிகள் நிறுவவும், நடத்தவும் கொண்டுள்ள உரிமைகளில் குறுக்கிடும் வகையில் பொருள் கொள்ளப்படக்கூடாது.
ஆனால், இவ்விதியின் பகுதி (1)இல் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும்; அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சத் தரம் கொண்டிருக்க வேண்டும்- அவ்வளவுதான்.

விதி 15

1. (அ) கலாச்சார வாழ்வில் பங்கேற்கவும், (அ) அறிவியல் முன்னேற்றம், அதன் விளைவுகள் ஆகியவற்றால் பயன்பெறவும் (இ) தன் பொறுப்பில் உருவான எந்த அறிவியல், இலக்கிய, கலைத்துறை சாதனையிலிருந்தும் பொருளாதார வகையிலோ தார்மிக ரீதியாகவோ பலனடைவதற்கான பாதுகாப்பும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை இவ்வரசுகள் ஒப்புக்கொள்கின்றன.

2. அறிவியலையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும், வளர்க்கவும், பரப்பவும் தேவையான நடவடிக்கைகள் உள்பட இந்த உரிமையை மெய்ப்படவைப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் இவ்வரசுகள் செய்யவேண்டும்.

3. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், படைப்பு முயற்சிகளுக்கும் இன்றியமையாததான சுதந்திரத்தையும் இவ்வரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

4. அறிவியல்- கலாச்சாரத் தளங்களில் சர்வதேசத் தொடர்பு ஒத்துழைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படக்கூடிய ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடிய நற்பயன்கள் பல உண்டென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன. 