உலக அமைதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக அமைதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூன், 2024

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை-1

 



 பிப்ரவரி 16-29, 2024 

கீழே தரப்பட்டிருப்பது பாரிசில் 1995இல் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 28ஆம் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைத் திட்ட வரையறை’ ஆகும்.

முன்னுரை

1. சர்வதேச கல்வி மாநாட்டின் 44ஆம் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த வரையறையின் நோக்கமாகும். பல்வேறு சமூகங்களின் நிலைமைகளுக்கேற்ப தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைமுறைக்கான உத்திகளாகவும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் மாற்றிக்கொள்ளப்படக்கூடிய வழிகாட்டு நெறிகளை இது முன் வைக்கிறது.

2. இது விரைவான மாறுதல்களும் மாற்றங்களும் நிகழும் காலம். சகிப்பின்மை வெளிப்பாடுகள், இனப் பண்பாட்டின் வெறுப்பின் தோற்றங்கள், தன் அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் பயங்கரவாதத்தின் எழுச்சி, பாகுபாடுகள், போர், ‘அந்நியர்’க்கு எதிரான வன்முறை, செல்வர்க்கும் இல்லார்க்கும் இடையிலான பிளவுகளின் வளர்ச்சி ஆகியவை நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் தோன்றும் காலம். இக்காலத்துக்கேற்ப, அடிப்படை சுதந்திரம், அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றை உறுதி செய்தல் நிலைத்து நிற்கக் கூடியதும் சமத்துவ அடிப்படையிலானதுமான சமூக- பொருளாதார மேம்பாட்டை வளர்த்தல் என்ற இரண்டையும் குறிவைத்து செயல்முறை உத்திகள் உருவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இவை யாவுமே ஒரு சமாதானக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான பங்களிப்பைத் தருவன. அதற்கு மரபுசார்ந்த கல்விப் பணிமுறை
களில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.

3. உலகில் இன்று காணும் சவால்களை எதிர்காணுவதற்குரிய ஒன்றுபட்ட பயனுள்ள வழியில் செயல்பட உதவக்கூடிய ஆவணங்களைத் தனக்காக ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று உலக நாடுகள் அண்மையில் உறுதிபூண்டன. இந்தத் திசையில் மனித உரிமைகள் பற்றிய உலக மாநாட்டில் (வியன்னா, ஜூன் 1993) ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்’ மனித உரிமைகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான சர்வதேசப் பேரவைக் கூட்டத்தில் (மாண்ட்ரியல் நகர் மார்ச் 1993) ஏற்கப்பட்ட ’மனித உரிமகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான உலக நடவடிக்கைத் திட்டம்’, இணைக்கப்பட்ட பள்ளிகள் திட்ட உத்தி மற்றும் நடவடிக்கைத் திட்டம் (1994-2000) ஆகியன உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள், மேம்பாடு இவற்றைப் பேணுவதில் எதிர்கொள்ள நேரும் சவால்களைச் சந்திக்க உதவும் முயற்சிகளாகும்.

4. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறையானது ‘நாடுகளுக்கிடையிலான ஒத்திசைவு, ஒப்புறவு, உலக அமைதி இவற்றுக்கான கல்வி பற்றிய பரிந்துரை’, ‘மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் தொடர்பான கல்வி’ ஆகியவற்றால் உந்தப்பட்டு தனது உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசாங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் முன்பு ‘உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வி தொடர்பான சிக்கல்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் பற்றியும் ஒருங்கிணைவான, நிகழ்நாளுக்குரிய ஒரு பார்வையை முன் வைக்கிறது. பொது மாநாடு தன் 27ஆம் அமர்வில் வேண்டியபடி இதனைச் செய்கையில் நடப்பில் உள்ள நடவடிக்கைத் திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் நடைமுறை முக்கியத்துவம், பயன்தரு வலிமை ஆகியவற்றை வலுப்படுத்துவதே நோக்கமாயிருக்கிறது. எல்லா நாட்டு மக்களுக்கும் கல்வியறிக்கை, புதிய வழிகள் காண்பதற்காக கடந்தகால அனுபவம் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் விழைவு. அதற்குத் தக்க வண்ணம் இந்தத் திட்டவரையறை செயல்பாடுகளுக்கான கோட்பாடுகளையும் இலக்குகளையும் அடையாளம் காட்டுகிறது; ஒவ்வொரு அரசுக்கும் ஏற்ப அது வகுத்துக் கொள்ள வேண்டிய கொள்கைகளை உருவாக்குவோர் கவனத்துக்கு கருத்துரைகளை முன்வைக்கிறது. பிரகடனத்தில் கண்டுள்ள கடப்பாடுகளுக்கேற்ப அத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட நாடுகள் தம்முள் ஒப்புறவுடன் செயல்பட வகை செய்கிறது. ஆய்வுக்குரிய தலைப்புகளை நிர்ணயிக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஒரு இசைவான முழுமைக்குள் இணைத்துக் கொண்டுவர முயற்சிக்கிறது. அனைத்து மட்டங்களிலும் கல்வியை மறு ஒழுங்கு செய்ய முயல்கிறது. முறைகளை மறுசிந்தனைக்குட்படுத்துகிறது; கற்பிக்கும் கருவிகளை மறுபரிசீலனை செய்கிறது. ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆசிரியப் பயிற்சியை மேம்படுத்துகிறது. ஆக, கல்விமுறை மேலும் வெளிப்படையானதாக அனைவரும் பங்கெடுப்பதன் மூலம் உருப்பெற உதவுகிறது.

5. மனித உரிமகள் யாவும் உலகளாவியன, பிரிக்க முடியாதன, ஒன்றையொன்று சார்ந்தன, ஒன்றுக்கொன்று தொடர்பானவையுமாம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்திகள் குறிப்பிட்ட வரலாற்றுபூர்வமான, சமயபூர்வமான, பண்பாட்டியல் பூர்வமான அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியின் இலக்குகள்:

6. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி, ஆகியவற்றுக்கான கல்வியின் இறுதி இலக்கு, ஒவ்வொரு மனிதரின் மனதிலும், அமைதிப் பண்பாட்டுக்கு அடித்தளமாயமைந்துள்ள உலகளாவிய மதிப்பீடுகள், நடத்தைகளையும் விதைப்பதாகும். வெவ்வேறு சமூக- பண்பாட்டுச் சூழ்நிலைகளிலும்கூட உலக முழுவதிலுமே ஒப்புக்கொள்ளப்படக்கூடிய பொதுவான மதிப்பீடுகளை இனங்காண இயலும்.

7. சுதந்திரத்தை மதிக்கவும், அதன் சவால்களைச் சந்திக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவுமான வலிமையை கல்வி தரவேண்டும். சிரமங்களையும் நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள குடிமக்களைப் பழக்குவதும், பொறுப்புகளுக்கும் சுயசார்புக்கும் அவர்களைத் தயார் செய்வதுமே இதன் பொருளாகும். குடிமக்களின் கடப்பாட்டிற்கு உரிய மதிப்பினை ஒப்புக்கொள்வது, சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றவர்களுடன் இணைந்து உழைப்பது, நியாயமும் சமாதானமும் ஜனநாயகமும் நிலவும் ஒரு சமூகத்தைப் படைக்க முயல்வது ஆகியவற்றுடன் சுய பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு இணைந்திருக்கிறது.

8. பால்வேறுபாட்டிலும், சமூகங்களுக்கிடையிலான வித்தியாசங்களிலும் மனிதருக்கு மனிதர் உள்ள வேறுபாட்டிலும், பண்பாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளிலும் காணக்கிடக்கும் மதிப்பீட்டு முறைகளை இனங்காணவும் ஏற்கவும் தேவைப்படும் சக்தியையும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளல், அறிவைப் பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கான வலிமையையும் கல்வியானது தரவேண்டும். மக்கள் தாம் நேர்காணும் நிலைமைகளைப் புரிந்துகொள்ளுவது அவர்களது சொந்த வாழ்வு சமூக வரலாறு பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்வதையும், எனவே சிக்கல்களுக்கான ஒரே தீர்வு என்றெதுவும் எந்த ஒரு தனி மனிதர் கையிலோ, தனி ஒரு குழுமத்தின் கையிலோ இல்லையென்பதையும், ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வு இருக்கமுடியும் என்பதையும் வித்தியாசங்கள் நிறைந்த உலகில் கலாசாரப் பன்முக சமுதாயத்தின் உறுப்பினராக வாழ நேர்ந்துள்ள மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையினாலே, மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும், சமமானவர்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள வேண்டும். பொது அணுகுமுறைகளைக் காண்பது நோக்கமாயிருக்க வேண்டும். இப்படியாக கல்வி, சமூகங்களுக்கிடையேயும், மனிதர்களுக்குள்ளும் சமாதானம், நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்தும் கருத்துகளையும் தீர்வுகளையும் ஒன்றுகூட்டுவதை ஊக்குவிப்பதாக, சுயஅடையாளங்களை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

9. வன்முறையில்லாமல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வலிமையை அது மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் சகிப்புணர்வு, பாசம், பகிர்ந்துகொள்ளுதல், (அடுத்தவர் பற்றிய) அக்கறை போன்ற மாண்புகளை இன்னும் வலுவாக உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படுகிற உள்மன அமைதி மேம்படுவதை வளர்க்க வேண்டும்.

10. அறிவார்ந்த தீர்மானங்கள் எடுக்கவும், சமகால நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் என்று மட்டுமின்றி எதிர்காலம் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் தமது முடிவுகளையும் செயல்களையும் தீர்மானிக்கவும் தேவையான திறமையை, கல்வி மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

11. கல்வியானது குடிகளுக்கு பண்பாட்டு மரபுகளை மதிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் , நிலைத்து நிற்கக்கூடிய (பொருளாதார) மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லக்கூடிய உற்பத்தி முறைகள், நுகர்வு இயல்புகள் ஆகியவற்றைக் கைக்கொள்ளவும் கற்றுத்தர வேண்டும்.
தனியார் மதிப்பீடுகள்- கூட்டு மதிப்பீடுகள் ஆகியவற்றிடையேயும், உடனடியான அடிப்படைத் தேவைகளுக்கும் நீண்டகால அக்கறைகளுக்கிடையேயும் ஒத்திசைவு காணுவதும் தேவையாகும்.

12. சமச்சீரான நெடுங்கால வளர்ச்சிக்கான நோக்கிலமைந்த, சமத்துவத்தையும் ஒற்றுமையையும் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் ஏற்படுத்தத் தேவையான உணர்வுகளை விதைப்பதாயும் கல்வி அமைய வேண்டும்.
உத்திகள்

13. இந்த இலக்குகளை நிறைவேற்ற, கல்வியமைப்புகளின் உத்திகளும் நடவடிக்கை விதங்களும் சீரமைக்கப்படுவதன் தேவை தெளிவானது. கற்பித்தல் முறை, நிறுவன நிருவாகம், இரண்டிலுமே இந்தச் சீரமைப்பு அவசியம் தேவை. மேலும் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி அளிப்பது, உலகளாவிய மனித உரிமை என்பதன் பிரிக்க முடியாத- பிரிக்கக்கூடாத பகுதியான மகளிர் உரிமை பேணுதல் ஆகிய இரண்டும் உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியில் அடிப்படையான அம்சங்களாகும்.

14. உலக அமைதி, மக்களாட்சி, மனித
உரிமைகள் பற்றிய கல்விக்கான உத்திகள்:
அ. விரிவான பார்வை கொண்டமைய வேண்டும். முழுமை கொண்டு விளங்க வேண்டும். அதாவது பலவகை அம்சங்களையும் தழுவி இருக்கவேண்டும். அவற்றில் சில அம்சங்களை பின்வரும் துணைப் பகுதிகளில் விவரமாகக் காண்போம்.
ஆ. அவை எல்லா வகையான, எல்லா நிலைகளுக்குமான, எல்லாவிதமான கல்விகளுக்கும் பொருந்தவேண்டும்.
இ. கல்வித்துறையில் பங்காளிகளாக உள்ள எல்லாரையும், சமூகமயமாக்கும் பணியிலும் உள்ள எல்லா அமைப்புகளையும் சமூக நிறுவனங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
ஈ. நகரளவில், நாட்டளவில், வட்டார அளவில் உலகளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
உ. கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி தரக்கூடிய வகைக்கு மேலான்மை முறைகளையும், நிர்வாகத்தையும், ஒருங்கிணைப்பையும், பணி மதிப்பீட்டையும் ஒழுங்கமைத்தலின்மூலம் அவை குறிப்பிட்ட வகையில் நடவடிக்கைத் திட்டங்களை ஏற்படுத்தவும், உள்ளூர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், மேம்பாட்டு புது உத்திகளை ஊக்குவிக்கவும், நிறுவனத்தின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் செயலூக்கத்தோடு மக்களாட்சி முறையில் பங்களிக்கச் செய்வனவாக அமைய வேண்டும்.
ஊ. யாருக்காகச் செய்கிறாமோ அவர்களது வயது மனநிலை ஆகியவற்றுக்கிசைய அமைய வேண்டும். பயில்வோர் ஒவ்வொருவரின் கற்கும் சக்தியின் பரிணாம வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எ. தொடர்ச்சி உடையனவாயும் முரணற்றவை யாயும் விளங்க வேண்டும். உத்திகளின் தடைகளும் பயன்களும் மதிப்பிடப்பட வேண்டும். மாறிவரும் சூழல்களுக்கேற்ப உத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்த மதிப்பீட்டு முறை உதவும்.
ஏ. பொதுவாக கல்வியிலும், குறிப்பாக ஓரம்கட்டப்
பட்டவர்கள், வசதியற்றோர், கல்வியிலும் மேற்
கண்ட இலக்குகளை அடையத் தேவையான ‘வசதிகள்’ பற்றியும் சிந்திக்க வேண்டும்.

15. மாறுதல்கள் எந்த அளவு தேவை,
செயல்பாடுகளுக்கிடையிலான முன்னுரிமைப் படுத்தல், எந்த வரிசையில் நடவடிக்கைகளை நடைமுறையில் மேற்கொள்ள வேண்டும் ஆகியவை பற்றிய முடிவுகளை இறுதி செய்யும் முன்பாக முடிவெடுக்கும் எல்லா மட்டங்களிலும் மாறுபட்ட வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டியல் மரபுகள், நாடுகள் வட்டாரங்களின் மேம்பாட்டு நிலைகள், நாட்டுக்குள்ளேயே கூட மேம்பாட்டு நிலையில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

16. முறையான கல்வியிலும் சரி, முறைசாராக் கல்வியலும் சரி, முறைசாராக் கல்வியிலும் சரி, எல்லா மட்டங்களிலும் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய பாடங்கள் இடம் பெறுவது தீவிர முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வியின் உள்ளடக்கம்

17. ஒற்றுமை, படைப்புத்திறன், குடிமைப் பொறுப்புணர்வு, வன்முறை தவிர்த்த வழிகளில் பூசல்களுக்குத் தீர்வு காணும் வலிமை, விமர்சன சக்தி போன்ற மாண்புகளை உருவாக்குவதை வலுப்படுத்த, எல்லா மட்டத்திலும் பாடத்திட்டத்தின் உலகளாவிய பரிமாணங்கள் கொண்ட குடிமைக்கல்வி இடம் பெற வேண்டியது அத்தியாவசியமாகும். உலக அமைதியை உருவாக்கும் கூறுகள் பற்றிய அக்கறைகள் கல்விக்கு இருக்க வேண்டும். பல்வேறு மோதல்கள், அவற்றின் காரணங்களும் விளைவுகளும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தையும், மகளிர்க்கெதிரான சகலவகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, குழந்தைகள் உரிமை பற்றிய உடன்படிக்கை, போன்ற தேசிய சர்வதேசிய நிர்ணயிப்புகள் ஏற்பட்ட விதம், மக்களாட்சியின் அடிப்படைகள், இனவாதம், பெண்ணியப் போராட்ட வரலாறு, மற்ற பாகுபாடுகளையும் ஒதுக்குமுறைகளையும் எதிர்க்கும் இயக்க வரலாறுகள் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையும் கல்வியைத் திட்டமிடுவதில் இருக்கவேண்டும். பண்பாடு, மேம்பாடு தழுவிய சிக்கல்கள், இனங்களின் வரலாறுகள், அய்நா. முதலிய உலக அமைப்புகளின் பங்கு பணி பற்றியெல்லாமும் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும். அமைதி, மக்களாட்சி, மனித உரிமை பற்றியெல்லாம் கல்வி அமைய வேண்டும். விசேஷமான பாடங்களுக்கு மட்டுமே அழுத்தம் தருவதாக இருக்கக்கூடாது. கல்வி குறுக்கப் படலாகாது.

இந்தச் செய்திகளைப் பரப்புவதாகவே கல்வி முழுவதும் அமைய வேண்டும். அதுபோலவே பாடநூல் சீர்திருத்தமும் உலக அளவிலும் தேசிய அளவிலும் மற்றவர் பண்பாட்டுக் கூறுகளை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் அறிவைத் திருப்பிவிடும் போக்கில் அமைய வேண்டும். உள்ளூர் சிக்கல்களையும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதையும் இணைப்பதாக பாடநூல்கள் இருக்க வேண்டும் நாட்டுக்கு நாடு மதமும் பண்பாடும் மாறுவதால் அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு எத்தகைய அறநெறிக் கல்வி பொருந்தும் என்பதை நாடுகள் ஒவ்வொன்றும் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிறவனத்தின் சூழ்நிலையும் மக்களாட்சி மாண்புகளுக்கு இசைந்ததாக இருந்திட வேண்டும்.
கற்பிக்கும் கருவிகளும் வசதிகளும்

18. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரிடமும் அவர்கள் வசம் போதுமான கல்விக் கருவிகளும் வசதிகளும் இருக்க வேண்டும். எதிர்மறையான உருவகிப்புகளையும் ‘மற்றவர்கள்’ பற்றிய காமாலைப் பார்வையையும் தவிர்க்கும் வகையில் தேவையான மாற்றங்களைப் பாடநூல்களில் கொண்டு வருவது அவசியம். பாடநூல் தயாரிப்பில் பன்னாட்டுக் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாடநூல்களும் கல்விக் கருவிகளும் பிறவும் புதிதாகத் தயாரிக்கப்படும்போதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழல் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். குறித்த பொருள் பற்றிப் பேசும்போது பாடநூல்கள் அதன் பல பரிமாணங்களையும் பேச வேண்டும். அந்த நூல் எந்தப் பண்பாட்டின்/தேசியத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புலப்படுத்தப்பட வேண்டும். யுனெஸ்கோ, அய்.நாவின் பிற அமைப்புகள் ஆகியவற்றின் ஆவணங்கள் கல்விக்கூடங்களில் பரவலாகப் பரப்பப்படுவதும் பயன்படுவதும் விரும்பத்தக்கதாகும். அதிலும் குறிப்பாக பொருளாதாரக் காரணங்களினால் கல்விக் கருவி உற்பத்தி விரைவாக இல்லாத நாடுகளில் இது மிகவும் விரும்பத்தக்கது.. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி பற்றிய கல்விக்காக தொலைதூரக் கல்விக்கான தொழில்நுட்பங்களும், நவீன தகவல் தொடர்பு முறைகளும் ஏற்படுத்தித் தரப்படவேண்டும். l

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

 



 மார்ச் 16-31, 2024

பிப்ரவரி 16-29 இதழின் தொடர்ச்சி…

அந்நிய மொழிகளைப் படிக்கவும், பயன்படுத்தவும், பேணவுமான திட்டங்கள்

19. உலக அமைதி, மக்களாட்சி. மனித உரிமைகள் பற்றிய கல்வியின் மேம்பாட்டுக்கு எழுத்து, படிப்பு, பேச்சு ஆகியவை தொடர்பான
திட்டங்கள் சரியான அளவு வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம். தகவல் அறியவும்,
நாம் வாழும் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தேவைகளைத் தெரியப்படுத்தவும், சமூக சுற்றுச்சூழலில் நடைபெறும் நடவடிக்கைகளில் பங்கு பெறவும் எப்படி எழுதவும், படிக்கவும், பேசவும் விரிவான பயிற்சி இருப்பது மிகவாக உதவுகிறதோ அப்படி அயல்மொழி அறிவும் மற்றப் பண்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவு பெறவும் ஒரு வழியாகிறது. சமுதாயங்களிடையிலும் நாடுகளிடையிலும் நல்லவிதமான புரிந்துக்கொள்ளுதலை உருவாக்க இது அடித்தளம் அமைக்கிறது. யுனெஸ்கோவின் லிங்குவா பாக்ஸ் (மொழி மூலமாக அமைதி) திட்டம் அந்த வகையில் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

கல்விக்கூடங்கள்

20. கல்வித்துறை மாற்றங்களுக்கு இயல்பான உரிய இடம் பள்ளிகளும் வகுப்பறைகளும் ஆகும். கற்பிக்கும் – கற்கும் முறைகள், நடவடிக்கை முறைகள், நிறுவனக் கொள்கைகள் ஆகியவை உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றை அன்றாட வாழ்வின் பழக்கமாக ஆக்கவேண்டும். கற்றுக் கொள்ளக்கூடிய பாடமாகவும், காட்டவேண்டும். முறைகளைப் பொறுத்தவரை, தீவிர முறைகளைப் பயன்படுத்துதலும், குழுவாக வேலை செய்தலும், தார்மீக விஷயங்களை விவாதித்தலும் நேருக்கு நேராகப் பயிற்றுவித்தலும் ஊக்குவிக்கப்படுவதற்குரியன. அதேபோல், நிறுவனக் கொள்கைகள் தளத்தில் திறமையான மேலாண்மை முறைகளும் பங்கெடுத்தலும் மக்களாட்சி பூர்வமாக பள்ளி நிருவகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர், பெற்றோர், மாணவர் – ஏன் ஒட்டுமொத்த சமூகமும் அதில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

21. வெவ்வேறு நாட்டையும், வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலத்தையும் சேர்ந்த மாணவர், ஆசிரியர், பிற கல்வியாளர்கள் ஆகியோரிடையே நேரடியான சந்திப்புகளும் பரிமாற்றங்களும் ஊக்குவிக்கப்படவேண்டும். பரிசோதனைகளும் புதிய முயற்சிகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இடங்களுக்கு பிறர் சென்று பார்க்க வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் குறிப்பாக பக்கத்து நாடுகளுக்குள் நடத்தப்படுவது நன்று. பொதுவான சிக்கல்களைத் தவிர்ப்பது குறித்து வெவ்வேறு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலும் கல்விக்கூடங்களுக்கு இடையிலும் இணைந்து பணி செய்யும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நோக்கத்தில் ஒன்றுபடும் பள்ளிச் சிறார், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் இணையங்களைச் சர்வதேச அளவில் உண்டாக்க வேண்டும். அத்தகைய இணையங்களில் பாதுகாப்பின்மைக்கோ, தீவிர வறுமைக்கோ ஆளான பள்ளிகள் இடம்பெற முன்னுரிமை காட்டப்படவேண்டும். இதனை நெஞ்சிலிருத்தி யுனெஸ்கோவின் இணைக்கப்பட்ட பள்ளிகள் அமைப்பினை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் அவசியமாகும். இந்தவித நடவடிக்கைகள் யாவும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டங்களின் பகுதியாக இருக்கிற வசதிக்குத் தக்கவாறு துவக்கப்பட வேண்டும்.

22. தேறாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். எனவே, தனியொரு மாணவனின் சக்திக்கேற்ப கல்வி நீக்கப்போக்குடன் கூடியிருக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்ச்சியிலும் கல்வியிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியினை வலுப்படுத்தலும் சமூக ஒருமைப்பாட்டினை அடைவதில் கணிசமான முறையில் அடிப்படைத் தேவைகளாய் உள்ளன. பள்ளிகட்கு அதிக சுயாட்சி என்னும்போது, கல்வியின் வெற்றிக்கு சமுதாயமும் ஆசிரியர்களும் அதிகப்படி பெறுப்பேற்க வேண்டும் என்பதும் உட்பொருளாய் விளங்குகிறது. கல்வி அமைப்புகளின் மேம்பாட்டு அளவுகளுக்கிடையில் வேறுபாடு இருப்பதால் அதை வைத்தே சுயாட்சியின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லையேல் கல்வியின் உள்ளடக்கம் பலவீனமடைய நேரிடலாம்.

ஆசிரியர் பயிற்சி

23. ஆசிரியர், நிர்வாகியர், திட்டமிடுவோர், ஆசிரியப் பயிற்சியாளர்கள் என்று கல்வியமைப்பின் எல்லாத்தளத்தில் பணிபுரிகின்றவர்களுக்கும் தரப்படும் பயிற்சிகளில் சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வியும் இடம்பெறவேண்டும். அத்தகைய பணிக்கு முந்தைய, பணியில் பொதித்த பயிற்சிகள், மறு பயிற்சிகள் ஆகியவை நிகழிடத்தில் உள்ள முறைகள், சோதனைகளைக் கவனித்தல், பயன்களை மறு மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை அறிமுகம் செய்து நடத்திப் பார்க்க வேண்டும். தமது பணிகளைச் செவ்வனே முடிக்க பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், முறை சாராக் கல்வித்திட்டங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர், சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் (அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், சமூக இயல்/மன இயல் அறிஞர்கள் ஆகியோர்) உதவியையும் மனித உரிமைப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் அரசுசாரா அமைப்புகளின் உதவியையும் நாடவேண்டும். எல்லாவித கற்பிப்போர்களுக்கான பயிற்சிகளிலும் ஒரு பகுதியாக மனித சக்திப் பரிமாற்றங்களும் கற்பிக்கும் கலையும் இடம்பெறவேண்டும்.

24. ஆசிரியப் பணியை மேம்படுத்திக்கொள்ளும் விரிவானக் கொள்கையில் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் செவ்வனே பொருந்த வேண்டும். சர்வதேச மேதைகள், ஆசிரியர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஆகியோர் நடவடிக்கை முயற்சிகளை தயாரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களிடையிலேயே அமைதிக் கலாச்சாரத்தைப் பரப்புவதில் அவர்களுக்கெல்லாம் முக்கியப் பங்கு இருக்கிறது.
பலவீனமான பகுதியினருக்கான நடவடிக்கைகள்

25. பலவீனமான பகுதியினர், அண்மையில் பூசல்களுக்கு இடையில் வாழ நேர்ந்தோர், போர்சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டோர் ஆகியோருக்கு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயத்தேவை. விளிம்பில் வாழும் குழந்தைகளும் பால்முறை வன்முறைக்கோ பிற வன்முறைக்கோ ஆளான மகளிர்- சிறுமியர் ஆகியோருக்கும் சிறப்புக் கவனம் அத்தியாவசியம். கல்வியாளர்களுக்கும், போரிடும் குழுக்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக பூசல்களங்களுக்கு வெளியே பயிற்சிப் பட்டறைகளும் சிறப்பு மையங்களும் அமைத்தல், போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் கல்வியாளருக்கு சிறப்புப் பயிற்சி தருதல் ஆகியவற்றை நடைமுறையில் இயலக்கூடிய நடவடிக்கைகளுக்கு உதாரணங்களாகக் கூறலாம். இயன்ற இடமெல்லாம் இத்தகு முயற்சிகளை அரசாங்கக் கூட்டுறவுடன் மேற்கொள்ளல் நலம்.

26. கைவிடப்பட்ட குழந்தைகள், வீதிகளில் உள்ள குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள், பொருளாதார ரீதியாகவோ பால் அடிப்படையிலோ வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள், குழந்தை அகதிகள் முதலியவர்களுக்காக கல்வித்திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுதல் அவசரத் தேவையாகும்.

27. சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும், ஒருங்கிணைவு நடவடிக்கைகளிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பங்கு பெறுவதை வலியுறுத்தும் இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்வதும் அதே அளவுக்கு அவசரமானதாகும்.

28. மேலும், கல்வி பயில்வதில் சிரமங்கள் கொண்டோர் (இது மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறிக்கலாம்)களின் வித்தியாசமான தேவைகள் குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திவிடாமல், ஒருங்கிணைந்த கல்விச் சூழலிலேயே அவர்களுக் குரிய வகையான கல்வியை அளிப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.

29. அத்தோடுகூட சமூகத்தின் பல்வேறு குழுவினர்க்கு இடையிலும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கலாச்சார இன-சமய மொழி சார்ந்த சிறுபான்மையினர், ஆதிகுடிகள் ஆகியோரின் கல்வி உரிமைகளுக்கும் மரியாதை இருக்கவேண்டும். பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், கல்வி வசதி ஏற்படுத்தப்படும் விதம் ஆகியவற்றில் இந்த அக்கறையும் எதிரொலிக்க வேண்டும்.
ஆராய்ச்சியும் மேம்பாடும்

30. சிக்கல்கள் புதியனவாயிருக்கும்போது தீர்வுகளும் புதிதாய்க் காண வேண்டியிருக்கிறது. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமை ஆகியவை பற்றிய கல்வியின் சிக்கலான இயல்பைப் பயனுள்ள முறையிலும் அதற்கேற்ற முறையிலும் எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்துவதற்கான உத்திகளைக் கண்டாக வேண்டும். புதிய கற்பிப்பு முறைகளையும், புது அணுகல் நெறிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். சமூகப் பாடங்களில் ஆய்வு செய்யும் நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றிடையே ஆய்வுக்கான விஷயங்களைத் தெரிந்தெடுப்பதில் ஒருங்கிணைப்பை அதிகப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் (அரசாங்கம், பெற்றோர், ஆசிரியர், இன்ன பிறர்) ‘முடிவெடுத்தல்’ குறித்த ஆய்வுகள் நிகழ்த்தி அதன்மூலம் கல்வி நிருவாகம் பயனுள்ள முறையில் நடப்பதை மேம்படுத்த வேண்டும். மனித உரிமைகள் அதிலும் மகளிர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி மனிதர்களின் அணுகுமுறையை மாற்றுவதற்கான புதிய வழிகளைக் காணுவது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முடிவுகளை அளந்து அறிவிக்கும் காரணிகளையும் அமைப்பையும் உருவாக்குதல்,
அ. புதுமையான பரிசோதனைகள் குறித்து விபர வங்கிகள் அமைத்தல்,
ஆ. ஆராய்ச்சி முடிவுகளையும் பிற தகவல்களையும் பரப்பவும், பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை மூலம் கல்வித் திட்டங்களின் பலாபலன்களை நன்றாக அனுமானிக்கலாம்.

உயர்கல்வி

31. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய கல்வியில் உயர்கல்வி நிறுவனங்கள் பல வழிகளில் பங்களிக்கலாம். இந்தத் துறையில், உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் நியாயம், தொழில் நியாயங்கள், குடிமைக் கடப்பாடுகள், சமூகப்பொறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புள்ள திறமைகள், மதிப்பீடுகள், அறிவு ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும். உலகமே நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசுகள் ஒன்றையொன்று மேன்மேலும் சார்ந்திருப்பதை மாணவர்கள் உணர்வதையும் உயர்கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வித் துறைக்கும் பிற சமூக இயல் ஊக்கிகளுக்கும் ஒருங்கிணைப்பு

32. குடிகளின் கல்விக்குக் கல்வித்துறை மட்டுமே முழுதும் பொறுப்பல்ல. அது இப்பணியினைப் பயனுள்ள முறையில் செய்வதற்கு, குறிப்பாக குடும்பம், மரபுசார் தகவல் அமைப்புகள் உள்ளிட்ட தகவல் ஊடகங்கள், தொழில்துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

33. பள்ளிக்கும் குடும்பத்துக்குமிடையே ஒருங்கிணைவுக்கு, பள்ளி செயல்பாடுகளில் பெற்றோர் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், வயதுற்றோருக்கும் பொதுவாக ஊரார் அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டங்களை வரைந்து செயலாக்குவதும் பள்ளியின் பணியை வலுப்படுத்துவதற்கான அவசியத் தேவையாகும்.

34. குழந்தைகளையும் இளைஞர்களையும் சமூக அங்கமாக ஒருங்கிணைப்பதில் செய்தி ஊடகங்களின் தாக்கத்தை அனைவரும் ஒப்புக்கொள்வது வளர்ந்து வருகிறது. எனவே, விமர்சனக் கண்ணோடு ஊடகங்களின் பணியை அலசவும் அவற்றால் பயனடையவும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதும் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதும் அவசியமாகிறது. இதற்கும் இவ்வூடகங்களினால் பயனடைவதில் திறமையை வளர்த்துவிடவும் சில தெரிந்தெடுத்த திட்டங்கள் தேவைப்படுகின்றன. அதேசமயம், குறிப்பாக வெறுப்பையும், வன்முறையையும், கொடுமையையும், மனித கவுரவத்துக்கெதிரான அவமரியாதையையும் தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் அமைதி, மனித உரிமைக்கு மரியாதை தருதல், மக்களாட்சி, சகிப்புத்தன்மை முதலிய மாண்புகளை வளர்க்குமாறு இவ்வூடகங்களையும் வலியுறுத்தவேண்டும்.

இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் முறைசாராக் கல்வி

35. மனித உரிமைகள், மக்களாட்சி, உலக அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதில், பள்ளிக்கு வெளியே நீண்ட நேரம் செலவிடுவோர், முறையான கல்விக்கான வாய்ப்பற்றோர், தொழில்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பற்றோர், பட்டாளத்தில் உள்ளோர் ஆகியோர் சரியான இலக்காக அமைவர். முறையான கல்விக்கும் தொழிற்பயிற்சிக்கும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, முறைசாராக்கல்வி மூலம் பயனடைவது ஏற்புடையது. அவர்களது தேவைகளுக்கேற்ப உருவமைக்கப்படுமானால், முறைசாராக் கல்வியே அவர்கள் பொறுப்புள்ள
வர்களாக, பயனுள்ள வகையில் குடிமக்கள் என்ற தளத்தில் தம் கடமைகளை ஆற்ற ஆயத்தப்படுத்திவிடும்.
உலக அமைதி, மனித உரிமைகள், சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றை சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகள், சிகிச்சையகங்களில் உள்ள சிறுவர் சிறுமியர்க்கும் கற்றுத்தர வேண்டும்.

36. அரசு சாரா அமைப்புகள் சிறப்பாகப் பங்களிக்கக்கூடியதான முதியோர் கல்வித் திட்டங்கள் உள்ளூர் வாழ்க்கை நிலைமைக்கும் உலகப் பிரச்சினைகளுக்கும் உள்ள சங்கிலியை அனைவரும் உணரச் செய்ய வேண்டும். உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய பாடங்களுக்கு அடிப்படைக் கல்வித் திட்டங்கள் குறிப்பான முக்கியத்துவமளிக்க வேண்டும். நாடோடிக் கதைகள், நாடகங்கள், சமூக விவாத அரங்குகள், வானொலி போன்ற பொருத்தமான கலை வடிவங்கள் யாவும் விரிவான அளவிலான ‘மக்கள் கல்வி’க்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

வட்டார அளவிலும் நாடுகளுக் கிடையிலும் ஒத்துழைப்பு

37. சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வளர்த்தெடுப்பதற்கு, வட்டார ஒத்துழைப்பு, சர்வதேச ஒற்றுமை, சர்வதேச அமைப்புகள் – அரசாங்கம் – அரசுசாரா அமைப்புகள் அறிவியலார் உலகம், வணிகர் வட்டம், தொழில்துறை, தகவல் ஊடகங்கள் ஆகியவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியன தேவைப்படுகின்றன. இந்த ஒன்றுகூடலும் ஒத்துழைப்பும் வளரும் நாடுகள் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றைக் கற்பிப்பதை வளர்ப்பதற்கான தேவையை நிறைவு செய்துகொள்ள உதவ வேண்டும்.

38. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறைக்கு செயல்வடிவம் தரும் முயற்சிகளுக்கு உதவியாக யுனெஸ்கோ தனது நிறுவன ரீதியான திறமைகளைத் தந்துதவ வேண்டும். குறிப்பாக, வட்டார அளவிலும் உலகளவிலுமான தனது புதுமைகள் இணையத்தை இப்பணிக்குப் பயன்படுத்தச் செய்ய வேண்டும். ‘இணைத்துக் கொள்ளப்பட்ட பள்ளிகள் திட்டம்’ யுனெஸ்கோ சங்கங்கள், யுனெஸ்கோ மன்றங்கள், யுனெஸ்கோ கல்வி நிலையங்களுக்கான ஆய்வுரை, அறக்கட்டளை ஏற்பாடுகள், ஆப்பிரிக்கா – ஆசியா பசிபிக் – லத்தீன் அமெரிக்கா – கரீபியன்- அரபுநாடுகள்- அய்ரோப்பா ஆகிய இடங்களுக்கான பெரிய கல்வித்திட்டங்கள், ஜமேதியன் உலக மாநாட்டையடுத்த தொடர் நடவடிக்கைகளுக்கான அமைப்புகள்- குறிப்பாக, கல்வி அமைச்சர்களின் வட்டார மாநாடுகள், உலகளாவிய மாநாடுகள் ஆகியவை குறிப்பான பங்களிப்பு செலுத்த வேண்டும். இம்முயற்சிகளில் – குறிப்பாக தேசிய அளவில் – அந்தந்த நாட்டிலுள்ள யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையங்கள் உத்தேச நடவடிக்கைகளின் பயனுறுத்தன்மையை வளர்க்க ஒரு பெரும் அருட்கொடையாக அமைய வேண்டும்.

39. வட்டார அளவிலும், உலகளவிலும் நிகழவிருக்கும் உச்சநிலைக் கூட்டங்களில் இந்தத் திட்டவரையறையைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை யுனெஸ்கோ எழுப்ப வேண்டும்; கல்வியாளர்களின் பயிற்சிக்கான திட்டங்களை வரைய வேண்டும்; நிறுவனங்களின் இணையங்களை உருவாக்க வேண்டும் – வலுப்படுத்த வேண்டும்; கல்வித்திட்டங்கள், முறைகள், கருவிகள் பற்றியெல்லாம் ஒப்பீட்டுமுறை ஆராய்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவை பற்றிய கல்வி மீதான பிரகடனத்தில் பேசப்பெறும் கடப்பாடுகளுக்கு ஏற்ப திட்டங்கள் முறையாக கால ஒழுங்குப்படி மதிப்பீடு செய்யப்படவும் வேண்டும்.

40. உலகளாவிய நடவடிக்கைத் திட்டமொன்றை உருவாக்க வசதியாயும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னுரிமை வேலைகளை முடிவு செய்ய வசதியாகவும் இந்தத் துறையிலும் அய்.நா.வின் ‘உலக அமைதிக்கான செயல்நிரல்’, ‘மேம்பாட்டுக்கான செயல் நிரல்’, ‘செயல் நிரல்-21’, ‘’, ‘மகளிர் பற்றிய நான்காவது உலக மாநாடு’ ஆகியவற்றின் வரிசையில் அய்.நா. சார்ந்த மற்ற நிறுவனங்களின் உதவியுடனும் பிற வட்டார சர்வதேசசமூக உச்ச மாநாடு நிறுவனங்களின் உதவியுடனும் இந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்ப முயற்சிகளைத் துவக்க வேண்டும். அவற்றில் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய கல்விக்கான பன்னாட்டுக் கூட்டுறவுக்காக யுனெஸ்கோ மேலாண்மையின்கீழ் ஒரு நிதியம் அமைக்கலாம்.

41. இந்தச் செயல்திட்ட வரையறையை நடைமுறைப்படுத்துவதில் தேசிய அளவிலான அரசுசாரா அமைப்புகளும் உலகளாவிய அரசுசாரா அமைப்புகளும் தீவிரமாக பங்கெடுப்பது ஊக்குவிக்கப்படவேண்டும்.