ஞாயிறு, 29 மே, 2016

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும்  பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு பெற உரிமை உண்டு: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை, பிப்.2- வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, அக்குழந்தையைப் பராமரிக்க 6 மாதங்களுக்கு பேறு கால விடுப்பு பெற உரிமை உண்டு என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில்வே துறையில் பணிபுரியும் பெண், குழந்தை பெறுவதற்காக ஒரு வாடகைத் தாயுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில், அந்த வாடகைத் தாய்க்கு தற்போது 33 வார கால மகப்பேறு நிறைவடைந்துள்ளது.
பிரசவ காலம் நெருங்குவதால், அக்குழந்தையை பராமரிக்கும் பொருட்டு தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு ரயில்வே உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். அப்போது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கு ரயில்வே துறை விதிமுறைகளில் இடம்பெறவில்லை என்று கூறி அந்தப் பெண்ணின் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கானது நீதிபதிகள் அனூப் மேத்தா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.29) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்துக்கு இடைக்கால தீர்வாக, மனுதாரருக்கு மகப்பேறு கால விடுப்பாக 180 நாள்கள் (6 மாதம்) வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் (மார்ச்) 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு
புதுடில்லி, பிப்.2- மத்திய அரசின் சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், சிறார் நீதி திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம், பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு, பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து, அது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான தாசீன் பூனாவாலா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சிறார் நீதி திருத்தச் சட்டமானது, நியாயமற்றது, அவசர கதியில் கொண்டு வரப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானது’’என்று கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்  எனத் தெரிகிறது.
டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரின் வயது குறைவாக இருந்ததால், அவரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டும் விதிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
-விடுதலை,2.2.16

.

‘‘முக்கியமான முடிவுகளை எடுக்க மூத்த மகளுக்கு உரிமை உண்டு!’’

வரவேற்கத்தக்க டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு!
‘‘முக்கியமான முடிவுகளை எடுக்க மூத்த மகளுக்கு உரிமை உண்டு!’’

புதுடில்லி, பிப். 1_  முக்கிய மான முடிவுகளை எடுக் கும்போது வீட்டில் தந்தை பொறுப்பில் மூத்த மகளே அந்த முடிவுகளை எடுக்க லாம் அவளுக்கு அந்த உரிமை உள்ளது என்று டில்லி உயர்நீதிமன்றம் முக் கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
டில்லி ஆனந்த்பர்பத் என்ற பகுதியில் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. 4 சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் சகோதரர்கள் அனைவரும் இறந்து விட்டனர்.
நான்கு சகோதர்களில் மூத்தவருக்கு ஒரு மகளும் மகனும் உண்டு. மற்றவர் களுக்கு மகன்கள் மட்டுமே உண்டு. இந்த நிலையில் பாகப் பிரிவினைபற்றி மூத்த மகளைக் கலந் தாலோசிக்காமல் வீட்டில் உள்ள ஆண்கள் மட்டுமே முடிவு செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து அந் தப் பெண் டில்லி நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
வீட்டில் தந்தைக்குரிய இடத்தில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்க முத்த மகளுக்கு தகுதியுண்டு. இந்த வழக்கில் மூத்தவர் பெண்ணாக இருப்பதால் அவரை கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்றும் அவருக்கான பங்கை கொடுத்துவிடுவோம் என்று கூறுவதை ஏற்கமுடி யாது.
மாற்றங்கள் வந்துவிட்டன!
சமூகத்தில் பலவித மாற் றங்கள் ஏற்பட்டுவிட்டன. இக்காலகட்டத்திலும் பெண் களை வீட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இருந்து விலக்கி வைப்பதை ஏற்கமுடியாது. தந்தையின் இடத்தில் இருந்து முடி வெடுப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
பாகப் பிரிவினை, மதம் தொடர்பான விழாக்களை வீட்டில் நடத்துவது, மற் றும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை பற் றிய ஆலோசனை செய்து முடிவெடுப்பதில் ஆண் களின் பங்கே இதுநாள் வரை அதிகம் இருந்தது. இதனால் திடீரென பெண் ஒருவர் இந்த நிகழ்வுகளில்  முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் போது ஆண்களுக்குப் புதிதாகப் படலாம், ஆனால் இது இக்காலகட்டத்திற்கு மிக வும் தேவையான மாற்ற மாகும். வீட்டில் மூத்தவ ராக ஒரு ஆண் முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத் தில் மூத்தவளாகப் பிறந்த பெண் ஏன் அந்த முடிவை எடுக்கக் கூடாது? ஆகவே இனி அந்தக் குடும்பத்தில் நடக்கும் முக்கிய முடிவுகள் அனைத்திலும் மூத்த பெண் ணின் ஆலோசனைகளை யும் கேட்டு நடக்கவேண் டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள் ளது.
2005 ஆம் ஆண்டு வாரிசுரிமைச் சட்டம்
2005 ஆம் ஆண்டு இந்துமதவாரிசுரிமைச் சட்டப்பிரிவு 6 பெண் களுக்கு பூர்வீகச் சொத்து உரிமை கொண்டாட முழு உரிமை உள்ளது என்று திருத்தம் கொண்டுவரப் பட்ட நிலையில் தற்போது குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் மூத்த பெண்களின் பங்கு அவ சியம் என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தீர்ப்பாகும்.
டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், முக்கியமாக உயர் ஜாதி வர்க்கத்தில் உள்ள ஆணாதிக்கம் முடிவிற்கு வரும். இன்றளவும் இந்தி யாவில் பெரும்பான்மை யான குடும்பங்களில் பெண் கள் மூத்தவர்களாக இருந் தாலும் அங்கு ஆண்களின் அதிகாரமே குடும்பம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் இருக்கும்.   நீதிபதி வாஜரி கூறிய தாவது:
பெண்கள் முக்கிய முடி வெடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதைக் கூட நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டுமா? பெண் களுக்கு சொத்துரிமை கிடைத்துவிட்டது, ஆகை யால் கொடுப்பதை வாங் கிக்கொண்டு அமைதியாகச் செல்லும் காலம் முடிந்து விட்டது, ஆண் பெண் சம உரிமை பேசும் காலத்தில் இன்றும் பெண்களை முடி வெடுக்கத் தகுதியில்லாத வர்களாகப் பார்ப்பது எவ் விதத்திலும் சரியல்ல, பெண் கள் முக்கிய முடிவெடுக்கும் தகுதியற்றவர்கள் என்று கூறி புறக்கணிக்கும் பட்சத் தில் அவர்களின்  உரிமை களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம், 1956-ஆம் ஆண்டு சொத்துரி மைக்கான சட்டம் 2005-ஆம் ஆண்டு முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறி னார்.
-விடுதலை,1.2.16

ஞாயிறு, 15 மே, 2016

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது


மதுரை உயர்நீதிமன்றம் கருத்து


மதுரை, பிப். 7_ காதல் திருமணத்தின்போது பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு என கூறி யுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்றம் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கவுரவ கொலைகள், காத லால் தற்கொலை, கடத் தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க அரசு தவறிவிட் டது. காதல் என்ற பெய ரில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி, பிற ஜாதி யினரை திருமணம் செய்கின் றனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட் சணை கேட்டு கொடு மைப்படுத்தும் நிலையும் உள்ளது. இதனால் பெண் கள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். வன்முறை கூட ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கவுரவ கொலை கள் நடந்துள்ள நிலையில், அதை தடுக்க அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை தடுக் கும் விதமாக ஒவ்வொரு கலப்பு திருமணத்தையும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு செய்யக் கூடாது எனவும், பெற்றோர் உடன் வருவதை கட்டா யப்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எஸ்.தமிழ் வாணன் ஆகியோர், அர சியலமைப்பு சட்டப்படி ஒருவருக்கு, அவரது வாழ்க் கைத் துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.
-விடுதலை,7.2.15

புதன், 11 மே, 2016

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (1948 டிசம்பர் 10)


- இர.செங்கல்வராயன்

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை 6 ஆண்டுகள் நடை பெற்றன. இந்தப்போர் ஜெர்மனியின் இட்லராலும், இத்தாலியின் முசோலினி யாலும் தொடங்கப்பட்டது. இவ்விரு கொடுங்கோலர்களும் நேச நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு  நடவடிக்கையால் தோற்கடிக்கப்பட்டு 1945 ஜூலையில் போர் முடிந்து அனுமதி திரும்பியது. இந்தப்போரில் உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு போர்க் களங்களில் 5 கோடி மக்கள் மாண்டனர்!
போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நேச நாடுகள் ஒன்றுகூடி எதிர்காலத்தில் இதைப்போன்ற போர் நிகழாமல் தடுக்க அய்க்கிய நாடுகள் சபையை நிறுவின.  உலக நாடுகளிடையே ஒற்றுமையையும், நட் பையும் வளர்ப்பதும், மனித உரிமை களைப் பாதுகாத்தல் ஆகியவற்றைத் தனது முக்கிய இலட்சியமாகக் கொண்டு அய்.நா.சபை. செயல்பட்டு வருகின்றது.
1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அய்.நா.வின் பொதுச்சபை அனைத் துலக மனித உரிமைகள் பற்றிய விதிகளை வெளியிட்டது. இப்பிரகடனம் மனித குலத்தின் வாழ்வியல், அரசியல், பொரு ளாதார உரிமைகளைத் தன்னுள் கொண்டு விளங்குகிறது. இப்பிரகடனம் அய்க்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நாடுகளா லும் எவ்வகைக் கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பிரகடனம் 30 விதிகளைக் கொண்டது. முதல் 21 விதிகள் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பற்றியும், 6 விதிகள் பொரு ளாதார மற்றும் சமூக உரிமைகளையும் 3 விதிகள் பொதுவான கருத்துக்களைப் பற்றியும் கூறுகின்றன. இப்பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டில் 58 நாடுகள் இவ்வமைப்பில் அடங்கி இருந்தன.
1968 இல் அய்.நா.வின் பொதுச் செய லாளர் யு.தாண்ட், 43 நாடுகளின் அரசி யல் சட்ட அமைப்புகள் பிரகடனத்தின் முக்கிய இலட்சியங்களை உள்ளடக்கி உள்ளன என்ற கருத்தை வெளியிட்டார். இந்திய அரசியல் சட்டம் தனது குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளது.
பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள 1) வாழ்வியல் உரிமைகள் 2) அரசியல் உரிமைகள் 3) பொருளாதார உரிமைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் வரும் உரிமைகளைப்பற்றி மட்டும் சுருக்கமாக விளக்கி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
வாழ்வியல் உரிமைகள்
1) வாழும் உரிமை: மனிதன் உயிர் வாழும் உரிமை என்பது மகத்தானது. வாழும் உரிமை என்பது மற்ற உரிமை களுக்கெல்லாம் அடிப்படையானதாகும். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நெறிமுறைகளின் படி வாழ்தலே வாழும் உரிமை ஆகும்.
2) வேலை செய்யும் உரிமை: ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் திறமைக்கேற்ப வேலையைத் தேடிக்கொள்ளும் உரிமை உண்டு.
3) சொத்துரிமை: சொத்துரிமை மற்றைய உரிமைகளுக்கெல்லாம் ஊற் றாகும்; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பது வள்ளுவரின் பொய்யாமொழி.
4) கல்வி கற்கும் உரிமை, மனிதன் தன் உரிமைகளை அனுபவிக்க கல்வி அடிப்படை.த் தேவையாகிறது. எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்பது வள்ளுவரின் பொன்மொழி.
5) பேச்சுரிமை: மனிதன் உயிர்வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே மக்களாட்சி வலிவுடன் செயல் பட பேச்சுரிமை இன்றியமையாததாகும்.
6) பத்திரிக்கைச் சுதந்திரம்: பத்திரி கைகள் மக்களாட்சியின் நான்காவது தூண் என்று போற்றப்படுகிறது. குடி மக்களின் கருத்தை உருவாக்குவதற்கும், அரசின் குறைபாடுகளை எடுத்துக்கூறி அவற்றைக் களைவதற்கும் பத்திரிகைகள் சிறந்த தொண்டு புரிகின்றன.
7) சமய (மத) உரிமை: ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறிக்கொள்ளவும் உரிமை உண்டு. அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலுள்ள சாதிக்கொடுமைகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகள் இவற்றை வெறுத்து 14.10.1956 இல் நாகபுரியில் 4 இலட்சம் தொண்டர்களுடன் புத்த நெறியில் இணைந்தார். எம்மதத்திலும் சேராமல் ஒரு மனிதன் பகுத்தறிவு வாதியாக செயல்படவும் உரிமை உண்டு.
8) சங்கங்கள் அமைக்க உரிமை: கருத்துரிமை பெற்ற மனிதன் அதைச் செயல்படுத்த ஒத்த கருத்துடைய பலருடன் கூடி அளவளாவும் முறை தோன்றியது. தொழிலாளர் நலச்சங்கம், மனித உரிமைகள் மன்றம், ரோட்டரி சங்கம், தமிழ் வளர்ச்சி மன்றம் ஆகியவை இவ்வுரிமையில் அடங்கும்.
9) கூட்டம் கூடும் உரிமை: மக்களாட் சியில் அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற அவ்வப்போது பொதுக் கூட்டங்கள் நடத்தித் தங்கள் கொள் கைகளை பொதுமக்களின் முன்னால் எடுத்து வைக்கும் உரிமை உண்டு. இதைப் போலவே தொழிலாளர் சங்கங்கள், சமூகத்தொண்டு மன்றங்கள் போன்றவை கூட்டங்கள் நடத்த உரிமை பெற் றுள்ளன.
10) இல்லற வாழ்வில் ஈடுபடும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடு வதற்கும், குழந்தைச் செல்வங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் குடும்பத்தை பரா மரிப்பதற்கும் உரிமை பெற்றவனாவான்.
அரசியல் உரிமைகள்:
மக்களாட்சியில் அரசியல் உரிமைகள் என்பவை குடிமக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. இந்திய அரசியல் சட்டத்தில் சில அரசியல் உரிமைகளை அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. அரசியல் உரிமைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
1) தேர்தலில் வாக்களிக்கும் உரிமை: மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் ஆட்சியாகும். ஆண், பெண் இரு பாலரும் 18 வயது அடைந்திருப்பின் அவர்கள் வாக்குரிமை பெற்றவராவர். இந்திய அரசு தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தி வருகிறது
2) தேர்தலில் போட்டியிடும் உரிமை: இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்டவர் களே தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றவர்கள், அரசு ஊதியம் பெறு பவர்கள், குற்றவாளிகள் என்று நீதிமன்றத் தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடத் தகுதி அற்றவர்கள்.
3) அரசு அலுவலகங்களில் பணி செய்யும் உரிமை: தகுதி உள்ள ஒவ்வொரு குடிமகனும் அரசு அலுவலகத்தில் பணி புரியும் உரிமை பெற்றவன் ஆகிறான்.
4) அரசை விமர்சிக்கும் உரிமை: அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், மக்கள் நலனைப் புறக்கணிக்கும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும் அரசைக் கண்டனம் செய்ய ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
5) புகார் மனு தாக்கல் செய்யும் உரிமை: குடிமகனுடைய உரிமைகள் பறிக்கப்படும் போது அவன் நீதி மன்றத்தை அணுகித் தன் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளலாம்.
பொருளாதார உரிமைகள்:
இன்றைய மக்களாட்சிகள் அனைத் தும் குடிமக்களின் பொருளாதார உரிமைகளும், வாழ்வியல் உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பொருளாதார உரிமைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
1) வேலை செய்யும் உரிமை: இவ்வுரிமை அனைத்துப் பொருளாதார உரிமைகளுக்கும் அடிப்படை ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 41 வேலை செய்யும் உரிமையை வலியுறுத் துகிறது.
2) தகுந்த ஊதியம் பெறும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை பெற்றுள்ளான். அனைவருக்கும் சமவேலை, சம ஊதியம் என்பது பொது நியதியாக அமைய வேண் டும்.
3) குறிப்பிட்ட நேரம் வேலை செய்யும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் குறிப் பிட்ட கால அளவே வேலை செய்ய முடியும். மனிதன் வேலை செய்யும் இடங்களில் அவன் வேலை செய்ய வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
4) தொழிற் சாலைகளில் தன்னாட்சி செய்யும் உரிமை: உலகில் தொழிற் புரட்சிக்குப்பின் இவ்வுரிமை செயல்படத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலை நிருவாகத்தில் பங்கு பெறும் உரிமையும், லாபத்தில் பங்குபெறும் உரிமையும் ஒவ்வொருவரும் பெற்றுள்ளார்கள்.
5) பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள்: 1948 ஆம் ஆண்டு அனைத்துலக ஒப்பந்தம் பெண்கள் அதிக நேரம் இரவில் வேலை செய்வதைத் தடை செய்துள்ளது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
குழந்தைகளை கட்டாய வேலைக்கு உட்படுத்தக்கூடாது. அய்.நா.சபை வலியுறுத்தியுள்ள குழந்தைகளின் உரிமைகளை இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் மறைவு எய்திய குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டின் துணைவியார் ரூஸ்வெல்ட் இப்பிர கடனம் மனித இனத்தின் மகா சாசனம் என்றும் முதன் முதலாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான விதிகள் அடங்கிய பிரகட னம் இதுவே என்றும் புகழ்ந்துள்ளார்.
-விடுதலை,31.1.15,ப5

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மாற்றத்தை ஏற்படுத்திய தீர்ப்பு



‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் 24.12.2015 ஆம் தேதி   WINDS OF CHANGE - All sides claim victory with SC verdict
என்ற  தலைப்பில் வெளிவந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம்.

அனைத்துத் தரப்பினரும் தங்க ளுக்கான வெற்றி என்று கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழர் தலைவர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த உண்மையை உணர்த்தும் பேட்டி

அனைத்து தரப்பினரும் அர்ச்சக ராகலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு இனிமேல் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முடியாது ஒரு தரப்பினர் கொக்கரிக்கின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு ஆகமம் கற்றறிந்த யாவரும் அர்ச்சகராக முடியும் என்று தெளிவாக் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு தானே முன்வந்து ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற 206 அர்ச்சகர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும். பயிற்சி பெற்ற இந்த அர்ச்சகர்கள் அனை வரும் தகுதிபெற்ற மதவல்லுநர்களால் சரியான ஆகமவிதிகளைக் கடை பிடித்து பயிற்சி பெற்றவர்கள்.
சிலர் இந்தத் தீர்ப்பைப் பற்றி தவறான தகவல்களைப் மக்களிடையே பரப்பி வருகின்றனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணையான 23 மே 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சிவாச்சாரி யார்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்து. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசாணையை எவ்விதத்திலும் பாதிக்காது. தமிழ்நாடு நீண்டகாலமாக முற்போக்குக் கருத் திற்கு ஓர் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிற்து. மேலும் இந்தியாவில் நிலவும் ஜாதியக் கொடுமைகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக லாம் என்பதும் ஒன்றாகும். இதன் மூலம் கோவில்களில் நிலவும் ஜாதி தீண்டாமை ஒழியும்.  அர்ச்சகராக பயிற்சிபெற்றவர்கள் நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கின் காரணமாக அர்ச்சகர் பணியைச் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். கோவில் களில் தீண்டாமை இன்றும் தொடர்கிறது.
கோவில்களில் முன்பு இருந்த தேவதாசி முறையை தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது முடிவிற்கு கொண்டு வந்தது. தந்தை பெரியார் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் ஜாதியைக் காட்டி ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்க  தடைசெய்யப்பட்ட தெருக்களின் வழியாக அம் மக்களை அழைத்துச் சென்று அங்கு நிலவும் தீண்டாமையை  ஒழித்தார். தேவதாசி மற்றும் வைக்கம் இரண்டு போராட்டத் திலும் பெரியார் முனைப்புடன் செயல்பட்டு அங்கு நிலவி வந்த ஜாதி தீண்டாமையை ஒழித்தார்.
ஒரு பிரிவைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையையே சீரழித்து வந்த தேவதாசி முறை, ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைவதை தடை செய்த கொடுமை, நாயும் பன்றியும் திரியும் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்று தடைவிதித்த அவலங்களை பெரியார் தன்னுடைய போராட்டங்களினால் முடிவிற்குக் கொண்டு வந்தார். இன்று எந்த கோவிலுக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்லலாம் இதை யாரும் தடை செய்ய முடியாது.
சட்டம் அனைவருக்கும் சமம்
ஆனால் இன்று வரை கோவில்களில் தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே அர்ச்சகராகும் வடிவத்தில் உள்ளது. சிலர் அர்ச்சகராக குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தகுதியுடையவர்கள் என்றும், குறிப்பிட்ட வகுப்பில் பிறந்த வர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும் அவர்களால் மட்டுமே சிலை யைத் தொட்டு பூசை செய்யவும் அந்த கர்ப்பக்கிரகத்திற்குள் நுழையவும் தகுதி யுடையவர்கள் என்றும் கூறுகின்றனர். பிற வகுப்பினரால் கோவில்களில் அர்ச்சகராக முடியாது என்றும் அப்படி அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் கோவில்களின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்றும் வதந் தியைப் பரப்பி விடுகின்றனர்.
இந்த நிலையை மாற்றி  அர்ச்சகராகப் பயிற்சி பெற்ற எந்த வகுப்பினரும் கோவிலில் அர்ச்சகராகலாம் என்ற கருத்தை முன்வைத்தவர் தந்தை பெரி யார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது பெரியாரின் வாழ்நாள் லட்சியங் களில் ஒன்றாகும். இதனை மனதில் வைத்தே பெரியாரின் வழிவந்த தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி புதிய அரசாணையைப் பிறப்பித்த்து. இதன் மூலம் கோவில்களில் நிலவிவந்த தீண்டாமை அகற்றப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறையின் மூலம் நியமிக்கப்பட்ட தலைசிறந்த ஆகம வேத விற்பன்னர்களின் மூலம் 206 மாண வர்களுக்கு மந்திர உச்சாடன்ங்கள் மற்றும் ஆகம விதிகள் பயிற்றுவிக்கப்பட்டன.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் இவர்களின் அர்ச்சகர் பணி நியமனம் தடைப்பட்டது. அரசாணைக்கு எதிரான வழக்கில் அரசு மதச்சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளில் தலையிடுகிறது என்று கூறப்பட்டிருந்த்து. ஆனால் அரசியல் சாசனப்படி மதச்சுதந் திரம் என்பது அனைவருக்கும் சம்மானது என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்தரப்பு மனுதாரர்களின் வாதங்களை உச்சநீதி மன்றம் நிராகரித்தது; மேலும் தனது தீர்ப் பில் அரசியல் சாசனத்தில் கூறப்பட் டுள்ள உரிமைகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்றும் மதரீதி யிலோ இன ரீதியிலோ பாகுபாடு காண் பித்து சமூகத்தில் பிரிவினையை ஏற் படுத்தக் கூடாது என்றும் தீர்ப்பில் தெளி வாகக் கூறிவிட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து மாநில அரசு 2006 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசா ணையின்படி பயிற்சிபெற்ற அனை வரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும். தமிழக அரசின் இந்த ஆணை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். இன்றுவரை கோவில் களில் நிலவும் தீண்டாமையை ஒழித்து தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடி யாக இருக்கவேண்டும்
-விடுதலை,28.12.15

சனி, 13 பிப்ரவரி, 2016

திருமணமான பெண்களும் வாரிசு வேலை கோரலாம்!


பிலாஸ்பூர், டிச.7 அரசு துறையில், வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும், கருணை அடிப்படை வேலையை, திருமணமான பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரில், நீர்வளத் துறையில் பணியாற்றிய, ஜெய்தேவ் பிரதான் என்பவர், 2011இல் மரணம் அடைந் தார். இதையடுத்து, அவர் மகள், சரோஜினி பாய், 'அரசு துறையில் பணியாற்றி, இறந்தோரின் வாரிசுக்கு, கருணை அடிப்படையில் வழங்கப் படும் வேலையை எனக்கு வழங்க வேண்டும்' என, நீர்வளத் துறைக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், 'வாரிசு என்றாலும், திருமணமான பெண்களுக்கு, வேலை வழங்க சட்டத்தில் இடமில்லை' என, தெரிவித்து, அவரின் கோரிக்கையை சத்தீஸ்கர் அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, சரோஜினி பாய், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி, சஞ்சய் கே.அகர்வால் முன்,   விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின், வாரிசுக்கு கருணை அடிப்படை பணி கொள் கையே தவறு என்று கூறிய நீதிபதி, 45 நாட்களுக்குள், சரோஜினிக்கு, வேலை வழங்க உத்தரவிட்டார்.
தீர்ப்பின் விவரம்:சத்தீஸ்கர் அரசின், கருணை அடிப்படையிலான, வாரி சுக்கு வேலை கொள்கை பாரபட்சமாக உள்ளது. திருமணமான பெண்ணுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுக்கும் அரசின் கொள்கை, பிற்போக்குத் தனமானது. இது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை வழங்க வகை செய்யும், அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கத் திற்கே முரணானது. ஆகவே, சத் தீஸ்கர் அரசு, உடனடியாக, அரசு பணிக்கான வாரிசு கொள்கையை திருத்த வேண்டும். அந்தப் பெண் ணுக்கு வேலை வழங்க வேண்டும்.

-விடுதலை,7.12.15

சனி, 26 டிசம்பர், 2015

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 8_ பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப்பதை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில்  கூறப்பட்டு உள்ளதாவது: திருமண உறவைத் தாண்டியும் சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர். அல்லது சில பெண்கள் தாங்கள் மட்டுமே குழந்தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது.
அதனால் தாயின் அடையாளம் கண்டிப்பாக தெரியும்.  சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை சேர்க்க தாய் விரும்பாமல் இருக்கலாம். இதுபோன்ற  காரணங்களால் ஒரு குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. சட்டங்கள் மிகவும் வலுவானவை, அடிப்படையானவை. அதே நேரத்தில் மாறிவரும் காலசூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை. நாட்டில்  பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பிறப்பை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது.
இதை  அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று  கட்டாயப்படுத்தக் கூடாது. அது அக்குழந்தையின் தாயின் விருப்பமாகவே இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



குழந்தையின் பாதுகாவலர் விவகாரம் - தந்தையின் ஒப்புதல் தேவையில்லை
புதுடில்லி, ஜூலை 6 திருமணமாகாத தாய்க்குப் பிறந்த குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமாகாத அரசு பெண் ஊழியர் ஒருவர், தனது குழந்தையின் பாதுகாவலராக இருப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குழந்தையின் பாதுகாவலராக, தாய் இருப்பதற்கு, தந்தையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடை முறையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருமணமாகாத பெண்ணுக்குப் பிறகும் குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு  மாறாக, கீழ்நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ, இதுபோன்ற தீர்ப்பை குழந்தையின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அறிவித்திருந்தால், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை,1-15.10.15