ஞாயிறு, 15 நவம்பர், 2015

சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்கா?


உலகத்தில் எங்கும் கேள்விப்பட்டு இருக்க முடியாத அதிசயமான தகவல் இது. 1968 ஜனவரி 17 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் சரி, இனி நடக்கப்போகும் திருமணங்களும் சரி (With retrospective Effect) செல்லுபடியாகும் என்று சட்டம் கூறியது.
இதற்கிடையே சுயமரியாதைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் தந்தை பெரியாரே சாட்சியம் அளித்தார்.  அந்தச் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுண்டு.
ஆடையூர் ரெங்கம்மாள் - சிதம்பரம் திருமணம் (கழகத் தலைவரின் மாமனார் - மாமியார் திருமணம்) 1934 இல் தந்தை பெரியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது- சுயமரியாதை முறையில், அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், அந்தத் திருமணம் அக்னியை வலம் வராமல், சப்தபதி எடுத்து வைக்காமல் நடைபெற்றதால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
‘‘இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் சட்டப்படி யான பிள்ளைகளாகக் கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும் அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்குண்டு; ஆனால், இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டிகளின் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள்’’ என்று ஜஸ்டீஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயண ராவ் என்ற இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வளவு நடந்ததற்குப் பிறகும்கூட சுயமரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டுதானிருந்தன. அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட சம்மதத்தை அளித்தார்கள்.
இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில்கூட சட்ட சம்மதம் பெற்று விட்டது. இந்த நிலையில், சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்குரைஞர் ஒருவர் பொது நல வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது.
சுயமரியாதைத் திருமண முறையில் சடங்குகள் கிடையாது. மோதிரத்தை மாற்றிக் கொள்கிறார்கள் - இந்து மதத்தில் இந்த முறை கிடையாது. ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின்மீது திணிப்பது விதி மீறல் ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் இதைப் புகுத்தி இந்துத் திருமண திருத்த சட்டம் என்று கூறுவது சட்ட விரோதம் என்று மனுதாரர் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் (தலைமை நீதிபதி), நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நடைபெற்றது.
சீர்திருத்த  சுயமரியாதைத் திருமணம் செய்யவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதைத் தவிர வேறு வகையில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்பது வேறு விடயம்.
ஆனாலும் பார்ப்பனப் பழைமையைக் கட்டிக் காப்பதிலும், இந்து மதச் சடங்குகளைக் காப்பாற்றுவதிலும் இன்னும் பார்ப்பனர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
2013 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.எஸ்.கர்ணன் அவர்கள் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. இரு குழந்தைகள் பிறந்ததற்குப் பிறகு - கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.
திருமணம் ஆனதற்குச் சாட்சியமும், சடங்கு முறை களும் இல்லாததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.
கணவன் - மனைவிக்கிடையே பாலுறவு நடந்திருக் கிறது என்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு வரும் திருமணம் செய்துகொள்வதற்கான வயதினையும் எட்டியுள்ளனர்.
திருமணத்திற்குச் சடங்குகள் முக்கியமல்ல; பாலியல் உறவு இருந்தாலே அது திருமணம்தான் என்று தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தின் தாக்கம் எத்தகைய வீறுதன்மை கொண்டது - இந்த நிலை தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களிலும் நினைத்தே பார்க்க முடியாது.
ஆனால், அண்மைக் காலங்களில் சினிமாக்களில் புரோகித கல்யாணங்களுக்கு இடம் அளித்து வருவது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கதும்கூட! சினிமாத் துறை பார்ப்பனீயத்துக்குக் குற்றேவல் செய்கிறதா?
திராவிட இயக்கப் பின்னணியில் நடத்தப்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சியில் கோவில் திருமணம்பற்றி சிலாகித்து, ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு அளிக்கப்பட்டது - வெட்கப்படத்தக்கது, கண்டிக்கத்தக்கதுமாகும்.
-விடுதலை வலைப் பூ
1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு



1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு
Logo
சென்னை, நவ.12-

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் ஒரு கொள்கையாக சுயமரியாதை திருமணம் உள்ளது. அந்த வழியில் வந்த அண்ணா, 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். இதற்காக இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து திருமண சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை. மாறாக, நண்பர், உறவினர் முன்னிலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொண்டாலே அது திருமணமாக கருதப்படும் என்று சுயமரியாதை திருமணச் சட்டம் கூறியுள்ளது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.அசுவத்தாமன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்து மதம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதன்படி, வெவ்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றபடி திருமண சடங்குகளை வைத்துக்கொண்டு திருமணங்களை நடத்துகின்றனர்.

அந்த வகையில் இந்துக்களிடையே மேலும் ஒரு திருமண முறையாக சுயமரியாதை திருமணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை நோக்கம் இருக்க கூடாது. அந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணம் என்பது புரோகிதர் முன்னிலையில் நடந்தால்தான் அது செல்லும் என்ற நிலையை மாற்றுவதுதான். அவர்கள் இல்லாமலேயே, மற்றவர்கள் முன்னிலையில் நடப்பதும் செல்லக்கூடிய திருமணம்தான் என்பதுதான் அந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

உறவினர், நண்பர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது அல்லது தாலி கட்டிக் கொள்வது ஆகிய நிகழ்வோடு திருமணம் முழுமையாக நடந்துவிடுகிறது. இது சட்டப்படி செல்லக்கூடிய திருமணமாகும்.

சுயமரியாதை திருமணங்கள் செல்லக்கூடியவை அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக