வெள்ளி, 6 நவம்பர், 2015

விவாகரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு ஜீவனாம்சம்

விவாகரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு ஜீவனாம்சம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


விவாகாரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு கண்டிப்பாக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு 1991ல் திருமணம் நடைபெற்றது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மனைவியிடம் விவாகரத்து கேட்டு மதியழகன் மதுரை குடும்பநல கோர்ட்டில் 2007ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு சந்திரிகா தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மதியழகனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் சந்திரிகாவுக்கு மாதம் 750 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும் 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
பின்னர், சந்திரிகாவின் கோரிக்கையை ஏற்று ஜீவனாம்சத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதியழகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். அதில், சந்திரிகா என்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் விவாகரத்து வழங்கப்பட்டது.
என்னுடன் சேர்ந்து வாழாதவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி எஸ். நாகமுத்து விசாரித்தார். முடிவில், நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாதவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே சட்டத்தில் விவாகரத்து பெற்று மறுமணம் செய்யாமல் தனியாக வாழும் மனைவிக்கு, கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்திரிகா, மனுதாரரிடம் இருந்து விவகாரத்து பெற்ற பின்பு மறுமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார்.
இதனால், அவருக்கு மனுதாரர் கண்டிப்பாக ஜீவனாம்சம் தர வேண்டும். மனுதாரர் ஜோதிடராக இருப்பதாகவும், அவரது மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்றும் கணக்கீட்டு 2 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க கீழ்கோர்ட்டு உத்தர விட்டது சரியல்ல. மனுதாரர் மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,24.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக