வியாழன், 31 ஜனவரி, 2019

சட்டப்படி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய விகிதாச்சாரப்படி கல்வி, வேலை வாய்ப்புகளில் எண்ணிக்கை குறையாமல் அளிக்கப்படவேண்டும்

அரசு அலுவலகங்கள்- நடைபாதைகள் - பொது இடங்களில் மத வழிபாட்டுச் சின்னங்கள் உடனே அகற்றப்படவேண்டும்


தமிழ்நாடு - புதுச்சேரி பார் சங்கங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிக்கவேண்டும் திருச்சியில் கூடிய திராவிடர் கழக வழக்குரைஞரணி கூட்டத்தின் தீர்மானங்கள்




திருச்சி, ஜன.28 தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி உள்ள இட ஒதுக்கீடு விகிதாசார எண்ணிக்கையில் குறைவு இல்லாமல் அத்தனை இடங்களிலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் நிரப்பப்படவேண்டும் என்ற தீர்மானம் உள்பட 11 தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரை யாடல் கூட்டம் 26.1.2019 சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


26.1.2019 திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங் கள் வருமாறு:

1) அரசியலமைப்பு சட்ட அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தின் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செய்துள்ளதை திராவிடர் கழக வழக்குரைஞரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

2) மண்டல் கமிசன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட வர்கள் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்பில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய விகி தாசாரப்படி அவர்களுக்குரிய எண்ணிக்கையில் மத்திய கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் உயர்ஜாதி மத உணர்வு கொண்ட நீதிபதிகளை நியமிப்பதைத் தடுத்து சமூகநீதி, ஜாதி பிரதிநித்துவ அடிப்படையிலும், பெண்களுக்கும் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த) நியமனங்கள் வழங்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

4) இந்த நாடு (இந்தியா) சுதந்திரம் அடைந்த போதே இந்து நாடாக அறிவித்து இருக்க வேண்டும் என்று கூறிய மேகாலய மாநில நீதிபதி எஸ்.ஆர்.சென் அவர்களை அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பதவிப் பிரமாண உறுதி மொழிக்கு எதிராகவும், இந்து மதவெறி பாசிச கருத்து கூறிய நிலையில் அவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதோடு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வருமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5) அரசு பொது இடத்தில் கடவுளே ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து மத வழிபாட்டு மய்யங்கள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்களை இந்த கூட்டம் பாராட்டுகிறது.

6) அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் நீதிமன்ற வளாகங்களிலும் அமைந்துள்ள மத வழிபாட்டு மய்யங்கள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துவதோடு அப்பகுதிகளில் மதவழி பாட்டு நடைமுறைகளையும், பூஜை, யாகம் போன்ற நிகழ்வுகள் நடை பெறா வண்ணமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

7) சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கடைப்பிடிக்கும், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியான ஆவணி அவிட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்களே மதிப்பளித்து அந்த குறிப்பிட்ட நாளில் நீதிமன்றங்களை ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்குவதை இந்த வழக்குரைஞரணி கண்டிப்பதோடு ஜாதி, மத வெறிக்கு நீதிமன்றங்களே துணை போவதாக இது அமைவதால் இனி வரும் காலங்களில் ஆவணி அவிட்டம் போன்ற மத நிகழ்வுகளுக்கு ஒரு மணி நேரம் நீதிமன்றங்கள் தாமதமாகத் தொடங்குவதை தடுத்து வழக்கமான நேரத்தில் நீதிமன்றங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் குழுமத்தில் (Tamilnadu and Pondicherry Bar Council) தற்போது உள்ள உறுப்பினர் எண்ணிக்கை 25ஆக உள்ளது. அதை 100-உறுப்பினர்கள் எண்ணிக்கை யாக மாற்றி பெண் வழக்குரைஞர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்குவ தற்கு ஏதுவாக 1961-வழக்குரைஞர் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டு மாய் இவ்வழக்குரைஞர் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

9) நீதிமன்ற வளாக உணவகங்களில் இதுநாள் வரை உயர்ஜாதி பார்ப்பனர் தன்மையோடு காய்கறி உணவே வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் விரும்பும் வண்ணம் நீதிமன்றவளாக உணவகங்களில் இறைச்சி மற்றும் மீன் உணவு இடம்பெறச் செய்ய வேண்டுமாய் இவ்வழக்குரைஞரணி கேட்டுக் கொள்கிறது.

10) அரசு அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களில் அனைத்து மதக்கடவுளரின் படங்கள் இடம் பெறக் கூடாது என்று அண்ணா அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணையை பின்பற்றச் செய்யுமாறு தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரையும் இவ்வழக்குரைஞரணி கேட்டுக் கொள்கிறது.

11) விடுதலை' சந்தாவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கும் (பெண் வழக்குரைஞர்கள் சங்கம், சிவில் மற்றும் கிரிமினல் சங்கங்கள் உட்பட) கொண்டுச் சேர்ப்பது.

DRAVIDAR KAZHAGAM LAWYERS FOURM FUND


தமிழர் தலைவர் ஆசிரியர் ரூ. 10,000, த.வீரசேகரன் ரூ. 10,000, சா.பாஸ்கர் (வரவு) ரூ. 10,000, சி.அமர்சிங் ரூ. 15,000, ஜெ.துரைசாமி ரூ. 10,000, சித்தார்த்தன் ரூ. 10,000, கணேசன் ரூ. 10,000, ஆனந்தமுனியராசன் ரூ. 5,000, ஆ.பாண்டியன் (வரவு) ரூ. 5,000, வீரமர்த்தினி ரூ. 5,000, சாக்ரடீஸ் ரூ. 5,000, மு.சென்னியப்பன் ரூ. 5,000, மாரிமுத்து (உரத்தநாடு) ரூ. 5,000, திருவையாறு ஸ்டாலின் ரூ. 2,000, கும்பகோணம் நிம்மதி ரூ. 5,000, கும்பகோணம் ரமேஷ் ரூ. 5,000, சென்னை விவேகானந்தன் ரூ. 2,000, தஞ்சை சரவணக்குமார் ரூ. 2,000, இ.டி.ராஜேந்திரன் (மதுரை - வரவு)  ரூ. 2,200, பூவை புலிகேசி (வரவு) ரூ. 2,000, க.வீரமணி ரூ. 10,000, ஜெயங் கொண்டம் மு.இராசா ரூ. 2,000, திருவையாறு ரமேஷ் ரூ. 2,000, திருச்சி முத்துசாமி ரூ. 2,000, ஆர்.ருத்திரகுமார் (தாம்பரம்) ரூ. 2,500.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். வழக்குஞைர் நா.கணேசன் வரவேற்புரை யாற்றினார். வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன்,  செயலாளர் மு.சித்தார்த்தன், அமர்சிங், ஆ.வீரமர்த்தினி, பூவை.புலிகேசி, அறிவுச் செல்வி, மணியம்மை, மாரிமுத்து மற்றும் சில வழக்குரைஞர்கள் கருத்துரை வழங்கினர். குறிப்பாக முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர், மதுரை மூத்த வழக்குரைஞர் மானமிகு இ.டி.ராஜேந்திரன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து விடுதலை' சந்தா மற்றும் வழக்குரைஞர் நிதியாக 5,000 ரூபாய் அளித்தார். தீர்மானங்களை செயலாளர் மு.சித்தார்த்தன் வாசித்தார்.

தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுரையில், 51-ஏ, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள ஷரத்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும், வழக்குரைஞர்கள் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டத்தின்போது தோழர்களைக் காப்பதற்கு எவ்வாறு செயல்படவேண்டும் என்றும், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தோழர்கள் நீதிமன்றங்களில் செயல்படவேண்டிய விதம் குறித்தும், குறிப்பாக  மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதி யினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும் உரையாற்றினார். வழக்குரைஞர் சென்னியப்பன் நன்றியுரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 28.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக