ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை நவம்பர் 1ஆம் தேதி வரை கெடு! மீறினால் கடும் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

 சென்னை, செப்.6  தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவில், பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ள லாம் என்றும், தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப் பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரி சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மனு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப் பாக நவம்பர் 1-ஆம் தேதிக்குள், கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

- விடுதலை நாளேடு, 6.9.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக