புதன், 25 அக்டோபர், 2023

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்'' -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

 

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!

பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!

1

சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம்.  தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைத் திரு மணத்தை அறிமுகப்படுத்தினார் -  இடையில் கூடத் தடை ஏற்பட்டாலும், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது; காரணம், பெரியார் ஒரு விஞ்ஞானம் - அதுவே இறுதியில் வெல்லும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங் களுக்குப் பொது அறிவிப்புத் தேவையில்லை.''

‘‘இந்து திருமணச் சட்டம் 1955-இன்படி, வழக்குரைஞர் களின் அலுவலகத்தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது  (சில மாதங்களுக்குமுன் வந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு). தற்போது வழக்குரைஞர்கள் அலுவலகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்'' என்று மிக அருமையான, முற் போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உருவாக்கிய வாழ்க்கை இணையேற்பு விழா - எளிய முறையில் இரண்டு சாட்சியங்களோடு நடத்திக் கொள்ள லாம். ஆண் - பெண் சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு, நட்பாளர்களாக வாழ்விணையர்கள், ஜாதி, மதச், சடங்குகளுக்கு இடமில்லாத ஒருவித அன்பும், புரிதலும் மிக்க எளிய மணமுறைதான் அமைதிப் புரட்சி பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்த சுயமரியாதைத் திருமண முறை.

இந்தத் திருமண முறை செல்லாது என்று 1953 இல் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் (உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்) தந்தை பெரியாரே சாட்சியம் கூறிய வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை - பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். (தெய்வானை ஆச்சி க்ஷிs சிதம்பரம் வழக்கு).

அத்தீர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமலேயே பல்லாயிரக்கணக்கானத் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்களாகத் தொடர்ந்து நடந்தே வந்தன!

1967 இல் சுயமரியாதைத் திருமணத்துக்கு 

சட்ட வடிவம் கொடுத்தார் அறிஞர் அண்ணா

1967 இல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமை யிலான அமைச்சரவை சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் (இந்துத் திருமணச் சட்டத் திருத்தம் 7Aஎன்ற புதிய பிரிவு இணைப்புமூலம்) என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, அதற்குப் பின்னோக்கிய கால அதிகாரத்தையும் (with retrospective effect) அளித்து தந்தை பெரியார் மகிழ, அவருக்கே காணிக்கையாக்கி, அறிஞர் அண்ணாவின் தி.மு.க. அரசு செய்து புதிய வரலாறு படைத்தது!

அதன்பின்னர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் அத்திருத்தம் செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்; அதனையும் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றே அருமையான தீர்ப்பினை வழங்கினர்!

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமை, புரட்சி, பொதுக்கூட்ட மேடைகளில்கூட எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது - சிக்கனமும், எளிமையும் கலந்த முறையில். இப்போது 70 ஆண்டுகளில் என்னே வெற்றியின் விரிவு - வெளிச்சம்!

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தலாம் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

2

திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலை யில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன் னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்'' என்ற மிக முற் போக்கான தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையாக அர சமைப்புச் சட்ட 21 ஆவது பிரிவின்படி சிறப்பான தீர்ப்புத் தந்துள்ளனர்.

‘‘வயது வந்த இருவர், சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்குக் குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது, கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது, அரசமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்'' என்று இந்த நீதிபதிகள் பழைமையின் - சனாதனத்தின் மண்டையில் ஓங்கி நீதியைத் தட்டி தட்டித் தந்துள்ளனர்!

பெரியார் அன்று சொன்னார் - 

உச்சநீதிமன்றம் இன்று சொல்லுகிறது!

இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், அவருக்கே உரிய பாணியில், ‘‘வயது வந்த ஒரு ஆணும் - பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி முடிவு செய்யும்போது, அதில் மூன்றாவது நபர் குறுக்கிடுவது அதிகப்பிரசங்கித்தனம் - ஆணவம் கலந்த அகம்பாவ எஜமானத்தனம்'' என்று கூறி, சுயமரியாதைச் சூடு போட்டார்!

இன்று உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக இதனைக் கூறும் அளவுக்கு பெரியார் கொள்கை வெற்றி பெற்று தகத்தகாய ஒளிவீச்சுடன் உலா வருகிறது!

‘‘எனது கொள்கை ஒருபோதும் தோல்வி அடையாது; வேண்டுமானால், வெற்றிகள் காலதாமதம் ஆகலாம்'' என்றார் தந்தை பெரியார்.

அது எவ்வளவு சரியான முன்னோட்ட முத்தான பிரகடனம் பார்த்தீர்களா? அதுபோலவே,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - நிறைவேற்றம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை 55 ஆண்டுகளான நிலையில், உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால இரண்டு தீர்ப்புகள் - கடந்த வாரத்தில் தொடர்ந்து, ‘‘ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செல்லாது'', ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் - தகுதியுடன் நியமனம் செய்யப்படுவது தொடருவதற்கு எத்தடையும் இல்லை'' என்று கூறி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களது ‘திராவிட மாடல்' ஆட்சியில், அரை நூற்றாண்டாக சட்டப் போராட்டத்திலிருந்த ஜாதி - தீண்டாமை ஒழிப் புக்கான இந்த  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமன வெற்றி!

பெரியார் கொள்கை ஒரு விஞ்ஞானம் - 

அதுவே இறுதியில் வெல்லும்!

தந்தை பெரியாரின் வெற்றி!

திராவிட இயக்கத்தின் வெற்றி!

நூற்றாண்டு விழா நாயகர் கலைஞரின்

முழு வெற்றியாக இப்போது ஜொலிக்கிறதே!

‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

பேரெதிர்ப்பால் பெருங்கொள்கை (திராவிடம்) தோற்பதுண்டோ?'

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! - புரிகிறதா?

இதனை ஊர் அறிகிறது!

உலகம் அறிந்து மகிழ்கிறது, வரவேற்கிறது!

எனவேதான், சனாதனம் அலறுகிறது;

ஆரியம் பதறுகிறது!

பெரியார் - திராவிடர் கொள்கை என்றும் வெல்லும்!

காரணம், இது ஒரு ‘‘விஞ்ஞானம் - மெய்ஞானம்!''

உண்மை அறிவு - அனுபவம் கலந்த வெற்றி!

அறிவியல் - உண்மை அறிவும் சொத்து!

புரிந்துகொள்வீர்! பகிர்ந்து கொள்வீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக