புதன், 19 மார்ச், 2025

தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து


விடுதலை நாளேடு

 மதுரை, மார்ச் 11 தமிழ் நாட்டில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.

பணி நீக்கம்

தேனியை சேர்ந்த ஜெய்குமார், உயர் நீதி மன்ற மதுரை அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் “நான் தேனி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாததால் என்னை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

மேல் முறையீடு

மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஜெய்குமாரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், “மனுதாரரின் தந்தை கப்பற் படையில் பணிபுரிந்தவர். இடமாறுதல் காரண மாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை. தற்போது தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள் ளார். எனவே பணியில் சேர்க்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

தமிழ் கட்டாயம்

பின்னர் நீதிபதிகள், “தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் தெரியாது என்றால் என்ன செய்வது? அவரால் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, எந்த மாநிலத்திலும் அரசுப் பணியில் இருப்பவர்கள் அந்த மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியாவிட்டால் குறிப் பிட்ட கால அளவுக்குள் மாநில அரசு சார்பில் நடத் தப்படும் மொழித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஒரு மாநி லத்தின் அலுவல் மொழி தெரியாமல் அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்?” எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

வெள்ளி, 14 மார்ச், 2025

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு

மொழிப் பிரச்சினை தலைதூக்குகிறது

 அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் படிப்பை கட்டாயமாக்கி கடந்த 2018இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் முறையாக அமல் படுத்தப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிப் பிரச்சினையால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தாய் மொழியை காக்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கத் துவங்கிவிட்டன. இந்த நிலையில், தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2025-2026 கல்வியாண்டு முதல் தெலங்கானா மாநிலத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஏய்சிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஞாயிறு, 2 மார்ச், 2025

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி வந்து விட்டால்

 


விடுதலை நாளேடு

பாடுபட்டவர்கள் பட்டினி கிடக்க மாட்டார்கள்

சோம்பேறி மேல் ஜாதியாய் இருக்க மாட்டான்
தந்தை பெரியார்

தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும் சுமார் 10 வருஷத் திற்கு முந்தியவரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது. ஆதலால் உள்ளூர்க்காரர்கள் நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது என்பது பரிசிக்கத் தக்கது என்றே கருதுகிறேன். உங்கள் பத்திரத்தில் உள்ளூரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்யவில்லை என்று சொல்லுகிறீர்கள் இவைகள் வாதவமாயிருக்கலாம். ஏனெ னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர் மனாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு விற்கு என்ற அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டிருக்கும் காரியத்தில் தனி சலுகை என்றும், பொருள் சம்மந்தமாயும் நான் எதைச் செய்யமுடியும்? என் சொந்தத்திலும் எனக்கு முன்பு இருந்த மாதிரியான பொருள் வருவாய் கிடையாது. பொதுக் காரியங்களின் உண்மையாய் உழைப்ப வர்களுக்கு வரும்படி இல்லாமல் போவதோடு கைபொருளும் சிதைந்து போய் விடும். ஆதலால் பொருள் மூலமாய் செய்யும் நன்மைகள் செய்வது கஷ்டமான காரியம்.

புரட்சி
மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட படியே உங்கள் சமூக விஷயத்தில் பொதுவாக ஒரு புரட்சிப் போன்ற காரியத்தை சுயமரியாதை இயக்கம் செய்திருக்கிறது என்று சொல்லவதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் காங்கிரசில் இருக்கும் போதும் தீண் டாதார் விஷயத்தைப் பற்றியே. அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தி யாகிரகம் என்பதும் தீண்டாமை விலக் குக்காகத் தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோயில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.
இன்னும் சுயமரியாதை இயக்கத் திலும் தீண்டாமை விலக்குத் தத்துவம் தான் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அது விஷயமாய் சமபந்தி போஜனம், கலப்பு மணம் முதலியவைகள் கூட ஜாதி வித்தியாசம் என்பது சிறிதும் பாராமல் அநேக காரியங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் உணர்ந்தே இருக்கிறீர்கள். இங்கு சற்று முன் பேசிய தோழர் அன்ன பூரணியம்மாள் ஒரு பறப்பெண் அவரை மணம் செய்து கொண்ட இங்கிருக்கும் தோழர் ரத்தின சபாபதி ஒரு திருநெல் வேலி சைவர் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசம் பாவிக்கப் படுவது மாறி இன்று சதிபதிகளாய் உங்கள் முன் விளங்கு வதைப் பாருங்கள்.

உங்கள் சமுகத்துக்கு சகலதுறைகளிலும் சர்க்கார் உத்தி யோகத்திலும் தனி பிரதிநிதித்துவம் எப்படி வந்தது? ஓர் காலத்தில் சுய மரியாதை இயக்க மந்திரிகளாய் இருந்த டாக்டர் சுப்பராயன், தோழர் முத்தையா முதலியார் ஆகியவர்கள் காலத்தில் தான் இது ஏற்பட்டது. அது போலவே சட்டசபை முதலிய ஸ்தாபனங்களிலும்கூட உங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் எப்படிக் கிடைத்தது. உலகமே வெறுத்து தள்ளிய சைமன் கமிஷனை சுயமரியாதை இயக்கம் தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லி கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன் தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும் சூழ்ச்சி செய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் தானம் பெற முடிந்தது. உங்களுக்குத் தனி கிணறும், தனிக் கோயிலும் கட்ட வேண்டு என்று சொன்ன தேசியங்களும், மாளவியாக்களும் உங்களுக்கு பொது கிணற்றில் உரிமையும், பொதுக் கோயில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக் கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுய மரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும் தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரசாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள் இந்த காரியங்களுக்காக சுயமரியாதை இயக்கமும், தோழர்களும் பொது சனங் களிடத்தில் எவ்வளவு கெட்டப் பெயர் வாங்கினார்கள், எவ்வளவு பழிப்புக் கும் தூஷணைக்கும் ஆளானார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?

தேசிய சூழ்ச்சி
இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையா என்பது நன்றாய் விளங்கும். இனிமேல் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டியதில்லை. இனியும் 10 வருஷக்காலத்திற்குள் தீண்டாமை இந்திய நாட்டை விட்டு பறந்தே ஓடிவிடும். தேசிய சூழ்ச்சி குறுக்கிடாமலிருந்தால் இன்னும் உங்களுக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட மார்க்கமுண்டு. எப்படியெனில் உலகம் ஒரு பெரும் புரட்சிக்கு தயாராகிக் கொண்டு வருகிறன்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி, அடைந்தாலும் தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும். இந்த நாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 160 வருஷ காலமாகியும் தீண்டாமை ஒழிக்கப் படாமல் இருப்பது பிரிட்டீசாருக்குப் பெருத்த அவமானகரமான காரியமாகும். அவர்கள் இனி ஆட்சி செய்ய தகுதி யுடையவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஒரு காரணமே போதும்.

பிரிட்டிஷார் இந்திய பொது ஜனங்கள் மீது, பார்ப்பனர் மீது, இந்து மதத்தின் மீது பழி போடலாமானாலும், இவர்களுக்கு அறிவும் யோக்கிய பொறுப் பும் எங்கு போயிற்று? என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்லு வார்கள். ஆகவே இனி யாருடைய தயவும் தேவை யில்லாமலேயே காரியங்கள் நடந்து விடும். உலகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை உதயம் ஆகி விட்டது. அதன் முன் எந்த மதமும், எந்தக் கடவுளும், எந்த மகாத்மாக்களும், எந்த தேசிய மும், எந்த அரசாங்கமும் இனி தடையாய் நிற்க முடியாது. இவைகள் இத்தனையும் அதன் வேகத்தில் கலந்து கொண்டு உங்களுக்கு நாங்கள் தான் நன்மை செய்தோம் என்று சொல்லி போலி உரிமை கொண்டாடி மக்களை ஏய்க்கவே அவைகள் இப்போது பாடுபடுகின்றன. இந்த ஏய்ப்பில் நீங்கள் சிக்கி விடாதீர்கள்.

உங்களுக்கு விடுதலை வேண்டுமானால், சமத்துவம் வேண்டுமா னால் எந்த மதத்தையும், எந்த கடவுளையும், எந்த தேசியத்தையும், எந்த மகாத்மாவையும் எந்த அரசாங்கத்தையும் எதிர்பாராதீர்கள். இவைகள் ஒன்றினாலும் உங்களுடைய தீண்டாமையை ஒழித்து சமதர்மம் கொடுக்க முடியாது. உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். அவ்வுணர்ச்சி உண்மையாக உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை அறியாமலே பெரியதொரு புரட்சி ஏற்பட்டு விடும். அதில் நீங்கள் மாத் திரம் சமத்துவமைடந்து உலக சுகபோகங் களில் சம சுதந்திரம் பெறுவதோடு நில் லாமல் உலகிற்கே சமதர்மம் வழங்கக் கூடியவர்களாகி விடுவீர்கள். ஆனால் நீங்கள் உண்மை சுயமரியாதை வீரர்களாக வேண்டும் மதத்திற்கு ஆளாவதோ, கடவு ளுக்கு அடிமையாவதோ, தேசியத்திற்கும், அரசாங்கத்திற் கும் அடிமையாவதோ ஆன காரியங்களில் எதில் கட்டுப்பட்டு விட்டாலும் உங்கள் புரட்சி அடங்கிவிடும், வலுவற்றதாகி விடும். பிறகு பழைய கருப்பன்தான் ஆய்விடுவீர்கள்.

துணிவு கொள்ளுங்கள்
நான் ஏன் இப்படி சொல்லுகிறேன்? எனக்கு மதமும் கடவுளும் இருந்திருக்க வில்லையா? இந்த ஊர் கோவில்களைப் போய் பாருங்கள் எங்கள் குடும்பப் பெயர் அங்கெல்லாம் இருக்கின்றதா இல்லையா? நாமம் பூசிக் கொண்டோ சாம்பல் அடித்துக் கொண்டோ இந்த ஊருக்கு வந்த பாகவதர் அடியார் என்பவர்களான சோம்பேறி களுக்கெல்லாம் சத்திரம் போல் சாப்பாடு போட்டு வந்ததை நீங்கள் அறிவீர்களா? சர்க்காரோடு தோளோடு தோள் போட்டு அதிகாரிகளுடன் உரைத்தது நீங்கள் அறிவீர்களா? தேசியத்தில் முன்னனியில் நின்று குடும்பத்துடன் அலைந்ததும் பல தடவை சிறை சென்றதும், நீங்கள் அறி வீர்களா? நீங்கள் உள்ளூர்க்காரர்கள். ஆனால் சகலமும் நேரில் பார்த்தவர்களான தால் இதை உங்களிடம் சொல்லுகிறேன். அயலூர்க்காரர்களுக்கு வேண்டுமானால் இது மயக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். அப்படி இருக்க இப்போது ஏன் இவைகள் அவ்வளவும் புரட்டு என்றும் உங்களுக்கு பயன்படாதது என்றும், பணக்காரர்களுடையவும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக் காரர்களுடையவும் நன்மைக்கு ஏற்ற ஆயுதங்கள் என்றும் ஏன் சொல்லுகிறேன். எல்லாவற்றையும் நான் அனுபவித்து பார்த்து விட்டேன்.

என்னு டைய 40, 50 வருஷ உலக அனுபவமும் இவைகளை சந்தேகமற விளக்கி விட்டது. ஆகவே, நீங்கள் துணிவு கொண்ட புரட்சிக் குத் தயாராகுங்கள். நீங்கள் ஏன் கீழ் ஜாதி என்று உங்களையே கேள்வி கேளுங்கள். கடவுள் காரணம் என்று தோன்றினால் உடனே அந்த கடவுளைத் தூள்தூளாக்கி உடைத்தெரியுங்கள். மதக் கட்டளை என்று தோன்றினால். அம்மதத்தைச் சின்னாபின்ன மாக்குங்கள் அல்லது அரசாட்சி முறை என்று கண்டால் அதை அழித்திடுங்கள் அல்லது மனிதர்களு டைய சூழ்ச்சி சுயநலப் பித்து என்று தோன்றினால் தைரியமாய் அவர்களிடம் இனிமேல் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள் உங்கள் புரட்டு களை உணர்ந்து விட்டோம் நல்ல தனத்தில் யோக்கியமாய் நடக்கிறீர்களா? அல்லது இதற்காக எங்கள் உயிரை இழக்க வேண்டியதுதானா? என்று கேளுங்கள்.

குற்றமாகாது
இதில் ஒன்றும் தப்பிதமில்லை. ஏனெ னில் பாடுபட்ட நீங்கள் பட்டினி கிடக் கவும், கீழ் ஜாதியாய் இருக்கவும், சோம் பேறியாய் இருந்தவர் செல்வனாய் இருக்கவும், மேல் ஜாதியாய் இருக்கவும் ஏற்பட்ட முறைகள் எதுவானாலும் அதை ஒழிப்பது எவ்விதத்திலும் குற்ற மாகாது அவை புரட்டின் பேரிலும் சூழ்ச்சியின் பேரிலும் சுயநலத்தின் பேரிலுமே கட்டப்பட்ட கட்டடமாகும். உங்களுக்கு உண்மையான சுயமரி யாதை உணர்ச்சி வந்து விட்டால் அது மணலால் கட்டிய வீடு சரிந்து விழுவது போல் அதுதானே சரிந்து விழுந்து விடும். ஆதலால் நீங்கள் உங்கள் பங்கை அடைய எதன் பேராலும் பின் வாங்கா தீர்கள். உங்களுக்கு எந்த கோவிலுக்குள் போய் எந்த கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரை பட்டினி அவதையையும், அரை நிர்வாண அவ தையையும், கல்வி இல்லாமல் தற்குறி களாய் மடையர்களாய் ஆக்கி வைத் திருக்கும் பகுத்தறிவற்ற அவதையும் ஒரு காலமும் நீங்கிவிடப் போவதில்லை. அதற்கு ஏற்ற முயற்சிகளே செய்ய வேண்டும் அதிலே வெற்றிபெற வேண் டும் அதற்காத்தான் சுயமரியாதை உணர்ச்சி வேண்டுமென்கிறோம் என்பது வாகப் பேசி முடித்தார்.
(வெளிநாடு சென்று திரும்பியபின் ஈரோட்டில் 27.11.1932ஆம் தேதி ஆதிதிராவிட வாலிபர்கள் கொடுத்த வரவேற்பில் ஆற்றிய சொற்பொழிவு).

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 04.12.1932

இந்து பரிபாலன சட்ட மசோதா – நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது [27.1.1925]

Published January 27, 2025,விடுதலை நாளேடு

 இந்து பரிபாலன சட்ட மசோதா – நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது [27.1.1925]

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவை அனைத்தும் தனி நபர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் பெயரில் உள்ளவர்கள் ஊழல் செய்து பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டுவந்தனர். மத நம்பிக்கை என்ற பெயரில் மன்னர்கள் இதை தட்டிக் கேட்பதில்லை.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் முதல் முதலாக கோவில்களில் மோசடிகள் நடப்பதாக துணிச்சலுடன், ஊழல் தொடர்பாக பொதுமக்கள் ஏராளமாக புகார்களைக் கொடுக்கத் துவங்கினர்.

இந்நிலையில் 1817-இல் முதல்முறையாக மதராஸ் நிலக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டமானது திருக்கோயில்களுக்கு வழங்கப் படும் நிதியுதவி முதலான அறக்கொடைகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.

1858-இல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றது. இதனால் குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசின் அனைத்து துறைகளின் எல்லா பதவிகளையும் ஆக்கிரமித்தனர். லண்டன் நியமித்த ஆளுநர்கள் இங்கே பொம்மை போல் உட்கார்ந்திருக்க, பார்ப்பனக் கூட்டம் விருப்பம் போல் கோயில்களும், அவற்றின் சொத்துகளும் யார் வசம் இருந்தனவோ, அவர்கள் தங்கு தடையின்றி மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.

புகார்கள் பெரிய அளவில் வந்தாலும்கூட, மனுதர்மம் மற்றும் சாஸ்திர சாம்பிரதாயங்களை காட்டியதாலும், கோவில் விவகாரங்களில் நடக்கும் மோசடிகளுக்கு என்று சரியான விதிமுறைகள் இல்லாததாலும் பிரிட்டிஷ் அரசும் ஒன்றும் செய்யமுடியாமல் நின்றுவிட்டது .அதேநேரம், கோயில்களின் உள்ளே இருக்கும் விலை மதிப்பு மிக்க தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவை தவறாகக் கையாளப்படுவதாகவும்,சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கொடுப்பது மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

1920-இல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். 27.01.1925 இல் இதே நாளில் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927- இல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்படி திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய வாரியத்தினை சீர்படுத்தும் பொருட்டு 1940-ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்தது.

இந்து சமயம் மற்றும் அறநிறுவனங்களை வாரியத்திற்கு பதிலாக அரசே நிருவகிக்கலாம் என்ற சிறப்பு அலுவலரின் பரிந்துரையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் வாரியத்தினை ஒரு அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தால் பயனுள்ளதாகும் என ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 1942-ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22 – ஜனவரி 1960, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

இந்திய அரசமைப்பின் முகப்புரை


1947ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசமைப்பின் முகப்புரை அமைந்துள்ளது.
1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டது.

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசமைப்புப் பேரவையில், முழுமையான ஆதரவோடு, இந்திய அரசமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

இறையாண்மை – முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.

சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் வாயிலாக அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.

நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சகோதரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.

முகப்புரையின் முக்கியத்துவம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம்,“சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு” ஆகிய மூன்று சொற்களை முகப்புரையில் சேர்த்தது.

தமிழ்நாடு

- விடுதலை நாளேடு, 25.11.2024

வியாழன், 28 நவம்பர், 2024

திருமணம் ஆகாதவர்களும் இனி தத்தெடுக்கலாம் : ஒன்றிய அரசின் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்!

விடுதலை நாளேடு

 திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக ‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தையில்லா இணையர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தை களை தத்தெடுக்கலாம். முதல் 2 ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.

அதேநேரம் ஆண், பெண் என இரு பாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆணாக இருக்கும்பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் பெற்ற குழந்தைகள் இருப்பினும் இணையர் தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரத்தில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் சுமுக இல்லற வாழ்க்கையை சம்பந்தப்பட்ட இணையர் வாழ்ந்து வருவதற்கான சாட்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவந்திருக்கும் இந்த திருத்தப்பட்ட 2024 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றலாம். அவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்வையிடுவர்.
தத்தெடுப்பு விதிகள் தற்போது தளர்த்தப்பட்டிருப்பதால் கூடுதல் எண்ணிக் கையிலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கொண்ட பெற்றோர் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நன்றி: சட்டக் கதிர், செப்டம்பர் 2024

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தத்தை செல்லாது என கூற முடியாது மதச்சார்பின்மை – சோசலிசம் அரசமைப்புச் சட்டத்தின் அங்கமே!

 


விடுதலை நாளேடு
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

புதுடில்லி, நவ. 23 – “இந்தியாவில் ‘சோசலிசம்’ என்ற கருத்து அனை வருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது, குடிமக்கள் மீதான சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல!” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு கூறியுள்ளது.
“நாடாளுமன்ற சட்டத்திருத்தம் மூலமே அரசமைப்புச் சட்ட முகப்புரையில் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் செல்லாது என கூற முடியாது.
மேலும், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற் கான அதிகாரம் பிரிவு 368 மூலம் முகப்புரைக்கும் நீட்டிக் கப்பட்டுள்ளது. முகப்புரையும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியே!” எனவும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரி வித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் வழக்கு
“இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில், இந்தியா ஒரு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற நாடு என்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இடையில் 42 ஆவது திருத்தத்தின் மூலம் இரண்டு வார்த்தை களும் 1976 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டி ருக்கின்றன. எனவே, இவற்றை நீக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரப் பேர்வழிகளான சுப்பிரமணியசாமி, பல்ராம் சிங், வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று (22.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசமைப்புச் சட்டத்தின் 42 ஆவது திருத்த மானது, நெருக்கடி கால கட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டது என்ப துடன், மதச்சார்பின்மை, சோச லிசம் ஆகிய வார்த்தைகளைச் சேர்த்தது மக்களை சில சித்தாந்தங்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதாக உள்ளது என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

ஒரு பொதுநல அரசு மற்றும் மக்களின் நலனுக்காக
நிற்க வேண்டும்
அதற்கு “இந்தியாவில் சோச லிசத்தை நாம் புரிந்து கொள்ளும் விதம், மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நமது சூழலில் சோசலிசம் என்பது பொதுநல அரசு என்று பொருள்படும். அவ்வளவுதான். நன்றாகச் செழித்து வரும் தனியார் துறையை அது ஒருபோதும் தடுக்கவில்லை. சோசலிசம் என்ற சொல் வேறுபட்ட சூழலில் பயன்படுத்தப் படுகிறது, அதாவது அரசு ஒரு பொதுநல அரசு மற்றும் மக்களின் நலனுக்காக நிற்க வேண்டும் மற்றும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதையே குறிக்கிறது” என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.

“மதச்சார்பின்மையைப் பொறுத்தவரையும் கூட, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் ‘மதச்சார்பின்மை’ என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்திருத்தம் செல்லாது என கூற முடியாது அத்து டன், “சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது நெருக்கடி நிலைக்காலத்திலா, என்றெல்லாம் பார்க்க முடி யாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை யுடன் சட்டத்திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றம் நிறை வேற்றிய சட்டத்தை செல்லாது என்று கூற முடியாது” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கை, விரிவடைந்த அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை யையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலும் இந்த வழக்கில் நவம்பர் 25 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.